கடலூர்: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகம் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கர்நாடகம், தெலங்கானா, ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை நிலவுகின்றன. இதனால் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை மையம் எச்சரிக்கை:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்:

நாளை தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிட வலியுறுத்தப்படுகிறது.

அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 14-06-2025: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி  மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும்  திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்யவாய்ப்புள்ளது.

15-06-2025: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி  மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,  தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி,  திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும்  விருதுநகர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்யவாய்ப்புள்ளது.

 16-06-2025: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,  நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி,  ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும்  விருதுநகர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   

தமிழக கடலோரப்பகுதிகள்: 

14-06-2025 முதல் 16-06-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.