தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழக மக்களை கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த வருடம் முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நோய் பாதிப்பு மற்றும் நோயினால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. தற்போது உலகளவில் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இருப்பினும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் தடுப்பூசி போடுவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 15 முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 15 - 18 வயது வரை உள்ள 1 லட்சத்து 20 ஆயிரத்து 600 பள்ளி சிறுவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று கடலூர் மாநகராட்சி பள்ளியில் 15 - 18 வயது மாணவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பொடும் பணியினை மாவட்ட ஆட்சியர் பாலசு்பிரமணியம் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், இதில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் முகாம் அமைத்து மருத்துவக்குழுவினர் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் தடுப்பூசி போடப்படும். மேலும், பள்ளி சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். தடுப்பூசி போட்டு கொள்வதினால் எவ்வித பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் ஏற்படாது. அசைவம் உண்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா தொற்றினால் இறந்தவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஆவர்.
பொதுமக்கள் மற்றும் பள்ளி சிறார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செளுத்திக்கொண்ட மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.