விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள நெற்குணம் கிராமத்தில் திருப்பனிசந்துறை நாயனார் கோவிலில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள நெற்குணம் கிராமத்தில் திருப்பனிசந்துறை நாயனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் சிதைவுற்றதால் எஞ்சிய கட்டிடங்களை முழுவதுமான அகற்றிவிட்டு மீண்டும் கோவிலை புனரமைப்பு பணி செய்ய தளத்தினை சமன் செய்தனர். அப்போது துர்கை புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது. சிற்பத்தினை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன், வீரராகவன், ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் எண்தோளி என்றழைக்கப்படும் கொற்றவைச் (துர்கை ) சிற்பம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலப்புடைப்புச் சிற்பம் என்றும் கண்டறியப்பட்டது.

இச்சிற்பமானது மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளதாகவும் கொற்றவை 48 அங்குல உயரமும், 27 அங்குல அகலமும் கொண்ட நீள் கோள பலகைக் கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கொற்றவை சிற்பம் பலகைக் கல்லின் மேல்புறத்தை அழகிய நீள்கோள வடிவத்தில், தலையில் கண்ணி மாலையுடன் கூடிய கரண்ட மகுடம் தாங்கியும், இரண்டு செவிகளில் குழைகளும், கழுத்தை சவடியும் (அட்டிகை) முத்துமணி ஆரமும், மார்பில் கச்சையும், இடைமுதல் தொடைவரை அரையாடை அழகிய முடிச்சுகளான சுங்குகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

அருள் சுரக்கும் கண்களுடனும் மகிஷனின் (எருமை) தலை மீது நேர்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறாள். தற்போது இப்புடைப்புச் சிற்பம் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்காலத்திலிருந்தே கொற்றவை வழிபாடு இருந்துள்ளது. கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள் - அவ்வை என்றால் உயர்ந்தவள் என்று பொருள். கொற்றவை வெற்றியை அருளும் தாய்.

போருக்குச் செல்லும் மன்னனும் வீரர்களும் தமிழரின் மிகத்தொன்மை வாய்ந்த கொற்றவைத் தெய்வத்தின் முன் தங்களுடையப் போர்க் கருவிகளை வைத்து படையலிட்ட பின்பே போருக்குச் செல்வர் பிறகு வெற்றிவாகைச் சூடிய பிறகு இக் கொற்றவையின் முன் படையலிட்டு வழிபாடு செய்வார்கள். நடுநாட்டில் இவ்வகை போர்த்தெய்வமான கொற்றவை நடுகல் அதிகமாக உள்ளது.

400 ஆண்டு கால சோழர்களின் ஆட்சியிலும், 600 ஆண்டு காலப் பல்லவர்களின் ஆட்சிக்காலத்திலும் நடுநாட்டைச் சேர்ந்த போர்வீரர்கள் தான் அவர்களுக்கு உறுதுணையாகப் போருக்குச் சென்றனர். போருக்குச் செல்லும் முன் அவர்கள் வழிபட்டுச் சென்று வெற்றியும் பெற்றனர். அதனால் இப்பகுதியில் கொற்றவைத் தெய்வம் அதிகமாகக் காணப்படுகிறது.