விழுப்புரம்: திண்டிவனம் அருகே அன்னம்புத்தூரில் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ளது அன்னம்புத்தூர் கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் கால அய்யனார் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது: அன்னம்புத்தூர் ஏரிக்குள் சன்னியாசி மேடு எனும் பகுதி இருக்கிறது. இதன் மீது கருங்கல்லில் தனிச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் சன்னியாசி சாமி என்று வணங்கி வருகின்றனர். இந்தச் சிற்பத்துக்கு உரியவர் அய்யனார் ஆவார். பிரம்மாண்டமான தலை அலங்காரத்துடனும். இடைக்கச்சை அணிந்தும் காணப்படும் ஐயனாரின் இடுப்பில் குறுவாள் இருக்கிறது. காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும் இடது கையை தொடை மீது வைத்தும் வலது காலை குத்திட்டும் இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் இவர் அமர்ந்து இருக்கிறார். வழக்கமான ஐயனார் சிற்பங்களில் காணப்படும் பூரணி பொற்கலை மற்றும் அவரது வாகனம் உள்ளிட்ட எதுவும் இந்த சிற்பத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் காலத்தால் முற்பட்ட சிற்பமாக இது இருக்கலாம். இதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட ஐயனார் சிற்பங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பல்லவர் கால ஆவுடையார் ஒன்று இங்குக் காணப்படுகிறது. மேலும் இதே காலத்தைச் சேர்ந்த கொற்றவை, விநாயகர் சிற்பங்கள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ள சிவாலயத்தில் வழிபாட்டில் இருந்து வருகின்றன. மேலும் சிவாலய வளாகத்தில் உள்ள இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் பிரம்மதேயமாக இருந்ததையும் அன்னப்புத்தூர் எனும் பெயர் அப்போதே வழங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.  பல்லவர் காலத்திலும் அதனைத் தொடர்ந்து சோழர் காலத்திலும் அன்னம்புத்தூர் கிராமம் சிறந்து விளங்கியது என்பதை இங்கிருக்கும் வரலாற்றுத் தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறினார். ஆய்வின்போது அன்னம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோ.மாதவன், ஆர்.தெய்வநாயகம், எஸ்.இமயவரம்பன், எம்.ஞானசேகர், இ.தட்சிணாமூர்த்தி, எஸ்.காயத்ரி, திண்டிவனம் எஸ்.சுந்தரகாந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.