அணைக்கட்டு அருகே , மனைவின்  நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து  கொடுமை செய்து வந்த 70 வயது  கணவனை , தீர்த்துக்கட்டும் எண்ணத்தில் அவரது இரண்டாவது மனைவி சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்  . 


அவர் அருந்திய மீதி உணவை சாப்பிட்ட  70 வயது முதியவரின் உறவினர் , ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா , ஒடுக்கத்தூர் அடுத்த அகரம்புதுமனை கிராமத்தை சேர்ந்தவர் சூரிமுத்து (வயது 70 ) விவசாயி , திருமணம் ஆன சில நாட்களிலே அவரது மனைவி இறந்த நிலையில் , சூரிமுத்து இதே பகுதியை சேர்ந்த நிர்மலா (45) என்பவரை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு 4 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வாழ்ந்து வருகின்றார் .




இந்த நிலையில் , சூரிமுத்துவிற்கு தனது இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது . இதனால் தொடர்ந்து நிர்மலாவை கொடுமை படுத்தி வந்துள்ளார் . மேலும் இதனால் சூரிமுத்து மற்றும் நிர்மலா இடையே அடிக்கடி வாக்குவாதமும் , தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது .


நேற்று காலை , சூரிமுத்துவிற்கும் , நிர்மலாவிற்கும் மீண்டும் தகராறு வெடித்துள்ளது . மனைவிடம் சண்டைபோட்டு சூரிமுத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு , அவருடைய விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார் . பின்னர் அவரது விவசாய நிலத்தில் அவரது உறவினர் காந்திராஜ் என்பவருடன் வேலை செய்து வந்துள்ளார் .




மதியம் ஒரு மணி அளவில் , சூரிமுத்துவிற்கு மதிய உணவு சமைத்து எடுத்துவந்து நிலத்தின் அருகே வைத்து விட்டு சென்றுள்ளார் நிர்மலா. நிர்மலா சமைத்து எடுத்து வந்த உணவை உட்கொண்டுள்ளார் சூரிமுத்து . மேலும் மீதம் இருந்த உணவை அவரது உறவினரான காந்திராஜூக்கும் பரிமாறியுள்ளார் .


உணவு அருந்தும் பொழுது ஏதோ  துர்நாற்றம் வீசுவதை உணர்த்த காந்திராஜ் உணவில் ஏதோ கலந்து இருப்பதாக தெரிவித்துள்ளார் . இவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும் பொழுதே , ஒருவர் பின் ஒருவராக மயக்கம் அடைந்து நிலத்தில் வீழ்ந்துள்ளனர் .


இதனைப் பார்த்த அங்கு இருந்த மற்ற விவசாயிகள் , இருவரையும் மீட்டு , மாதனுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் . அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் , சூரிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் , கவலைகிடமாகவுள்ள காந்திராஜ்க்கு உடனடியாக மேல்சிகிச்சை வழங்கவேண்டும் என்று தெரிவித்ததன்  பேரில் , காந்திராஜை , உடனடியாக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .





 


மேலும் காந்திராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் ,வேப்பங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சூரிமுத்துவின் இரண்டாவது மனைவி நிர்மலாவை , கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார் . மேலும் இறந்த சூரிமுத்துவின் உடலை , வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர் .