திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக அறிவிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற மாபெரும் புத்தக திருவிழாவினை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து 4000 சதுர அடியில் 105 அரங்குகளுடன் பிரம்மாண்ட முறையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களை பார்வையிட்டார். சூரியன் பதிப்பகம், நர்மதா பதிப்பகம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தவர்களின் அரங்கங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த மாபெரும் புத்தகத் திருவிழா வருகின்ற 19-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா அரங்கங்களை பார்வையிட வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகள் பொதுப்பணித்துறை அமைச்சருடன் கைகுலுக்கி அவர்களுக்கு புத்தகத்தை பரிசாக அளித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.




 


இந்த புத்தகத் திருவிழாவில் சிறு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பயனுள்ள பல்வேறு புத்தகங்களும், அரசு தேர்வுகள் வங்கி தேர்வுகள், நீட் தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சிறுவர்களுக்கு நீதி கதைகள், பொது அறிவு, கலை அறிவியல், இலக்கியம், சங்க கால இலக்கியங்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள் சார்ந்த சுமார் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் விழா அரங்கில் தமிழ் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய மாணவிகளின் கலை நிகழ்ச்சியை கண்டு களித்து முதல்வரின் நூலகத் திட்டத்தின் கீழ் பல்வேறு வாசகர்களுக்கு அடையாள அட்டையையும் புத்தகங்களையும் வழங்கினார். முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.




 


 விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில்; 


ஒரு மனிதன் கற்பதின் மூலமாகத்தான் அனைத்தையும் பெற முடியும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறி பேசிய அவர், தனது வீடு முதல் இந்திய நாடு வரை பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்றால் கல்வி அவசியம் என்றும் பேசினார். 1949 ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெர்மனியில் புத்தகத் திருவிழா நடைபெற்றது என்றும், அதனைத் தொடர்ந்து 2- வதாக 1972 ஆம் ஆண்டு டெல்லியிலும், 3- வதாக கல்கத்தாவிலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது என்றும் தொடர்ந்து சென்னையில் 1974 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது என்றும் சுட்டிக்காட்டி பேசிய அவர், மாணவர்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  


 




தமிழ்நாட்டின் அடையாளமாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ் நாட்டில் மாவட்ட மத்திய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1926, நடமாடும் நூலகங்கள் 14, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1915 நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் 745 தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் 4634 நூலகங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு இயங்கி வருவதாகவும் அவர் பட்டியலிட்டார்.தமிழக தலைவர்களிலேயே தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்தோ பொன்னாடையோ மலர் மாலையோ கொடுக்க வேண்டாம் அதற்கு பதிலாக புத்தகத்தை தாருங்கள் என புத்தகப் பழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் பெருமிதமாக பேசினார்.குற்றவாளிகள் சிறையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகம் அமைக்க ஏற்பாடு செய்தவரும் தமிழக முதல்வர் தான் என்றும் பேசிய அவர் பேசியவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் குடும்பத்தினருடன் புத்தகத் திருவிழாவிற்கு வந்து புத்தகங்களை பெற்று தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.