திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட வெண்மந்தை, எட்டிக்குட்டை, புன்னை, சூரியகுப்பம், ரங்கராஜபுரம், ஓசூர், மழவங்கரணை உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடுகள் மற்றும் காலை மாடுகள் போன்றவை தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இந்த திருட்டு தொடர்பாக சுமார் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் திருடு போனதாக 15-க்கும் மேற்பட்டோர் கீழ்க்கொடுங்காலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் எட்டிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ரமேஷ், ஜெயபால் ஆகியோரின் நிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக் குட்டியை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புதன்கிழமை அதிகாலை இருவருக்கும் தெரிய வரவே, இருவரும் காரில் சென்று அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களில் தேடியுள்ளனர்.

Continues below advertisement

 

Continues below advertisement

அப்போது, இவர்களது மாடுகள் மற்றும் கன்றுக் குட்டியை அவலூர்பேட்டை சந்தையில் விற்பதற்காக மர்ம நபர்கள் மினிவேனில் ஏற்றிக் கொண்டு வந்தவாசியில் இருந்து சேத்பட் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் கீழ்கொடுங்காலூர் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர், சேத்பட்டு அருகே சென்று கொண்டிருந்த மினிசரக்கு வாகனத்தை மடக்கி மாடுகள் மற்றும் கன்றுக் குட்டியை மீட்டனர்.அப்போது மினிவேனிலிருந்து கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தன் வயது வயது (27) தப்பியோடிவிட்டார்.அந்த வேனை ஓட்டி வந்த தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ஜோதி வயது வயது (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மினிசரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த ஏற்கனவே மாடுகள் திருடு போனதாக புகார் அளித்த விவசாயிகள் கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திருடு போன தங்களது மாடுகளையும் உடனடியாக கண்டுபிடித்து தருமாறும் அவலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுச் சந்தை நடைபெறும் மதல்நாள் நள்ளிரவு மர்ம நபர்கள் மாடுகளை திருடுகின்றனர். திருடிய மாடுகளை வாகனத்தில் எடுத்துச் சென்று மாட்டுச் சந்தையில் விற்று விடுகின்றனர்.மாடுகள் திருட்டு போனது எங்களுக்கு காலையில் தான் தெரிய வருவதற்குள் அவை வேறு ஒருவருக்கு விற்கப்பட்டு விடுகிறது. எனவே மாட்டுச் சந்தைகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். என விவசாயிகள் கோரினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் சமரசம் செய்ததை அடுத்து விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்.