திருவண்ணமாலை நகராட்சி அடுத்த வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட செல்வாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் வயது (62). இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மகன் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவருவதாக கூறப்படுகிறது. கடந்த 26-ந் தேதி சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ரவிசந்திரன் சென்னைக்கு சென்றுள்ளார். மகனை பார்த்து விட்டு மீண்டும் சென்னையில் இருந்து நேற்று திருவண்ணாமலைக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது ரவிசந்திரனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் ரவிசந்திரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அரையிறுதியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பிரோவில் இருந்து சுமார் 12 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


 




மேலும் இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு ரவிச்சந்திரன் தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க சென்னைக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் இதனை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து திருடிச்சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 





 


திருவண்ணாமலையில் நகரப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. நகர்பகுதியில் பட்டபகலில் வழிபறி மற்றும் கடைக்குள் சென்று கடையில் பணிபுரியும் வேலையாட்களிடம் சயின் போன்றவைகளும் மேலும் இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. இதனால் நகர்புறங்களில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதனால் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில்; பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்ல கூடிய பொதுமக்கள் காவல்நிலையத்தில் சென்று வெளியூர் செல்கிறோம் என்று தகவல் அளிக்க வேண்டும் என்றும்,மேலும் நேரில் சென்று தகவல் அளிக்க முடியவில்லை என்றால் ஹாலோ திருவண்ணாமலை என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்தால் 9988576666 ரோந்து பணியில் செல்லக்கூடிய காவல்துறையினர் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்று வருவார்கள் என்று தெரிவித்தார்.