திமுக அரசின் நிதிநிலை கூட்டத் தொடரில் விவசாயிகளுக்கு தனி நிதிநிலையை வரவேற்பதாக ஜோலார்பேட்டையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் .

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட் ரோடு பகுதியில் பாரத மாதா வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் வி. கே. செல்வம் தலைமை ஏற்று நடத்தினார். மற்றும் மாவட்ட , நகரப் பொறுப்பாளர்கள் பலர்  இதில் கலந்துகொண்டனர். இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பாரத மாதா உருவப்படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி வழிபாடு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.


 

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, திமுக அரசு ஆகஸ்ட் 13-ஆம் தேதி (இன்று)  நடக்கவிருக்கும் அரசுக் கூட்டத்தொடரை நிதிநிலை கூட்டத்தொடராக  நடத்தவேண்டும் மாறாக மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கூடிய கூட்டத்தொடராக இருக்கக்கூடாது. தமிழகத்தில் நிதிநிலை சீர் செய்யக்கூடிய நடவடிக்கைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் இந்து மக்கள் கட்சி சார்பாக முன் வைக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விவசாயிகளுக்குத் தனியான நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருக்கிறார் . இது ஒரு நல்ல முயற்சி இதை எங்கள் இந்து மக்கள் கட்சி சார்பாக  வரவேற்கிறோம்.

 

மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். அதில் ஆடி மாதம் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான திருவாதிரை நட்சத்திரத்தை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கும் நன்றியும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் இருக்கக் கூடாது. கட்சி சின்னங்களை பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது . உள்ளாட்சி அமைப்பு அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 



 

பின்னர் அவர் ஆம்பூர் நகரப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும்  தனியார் மருத்துவமனை கட்டிட வேலைகளால், அந்த பகுதியில் இருக்கும் நாகநாத சுவாமி கோவிலில் பூஜை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது , அந்த தடையை நீக்கக்கோரி  , திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்
   .

 

தமிழ்நாடு பட்ஜெட் 2021. 

 

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 14-இல் (நாளை ) தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில்  2021-2022-ஆம் ஆண்டுக்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.