சிறுநீர் தொற்று மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பேரறிவாளன் நாளை காலைக்குள்
  ஜோலார்பேட்டைக்கு  மீண்டும் திரும்புவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் அறிவு (எ) பேரறிவாளனுக்கு (49 ) சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளுக்குச் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், அவருக்கு 30 நாட்கள் பொது விடுப்பு வழங்கவேண்டும் என்று அவரது தாய் அற்புதம் அம்மாள் கடந்த  மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு  மனு அளித்திருந்தார் . அற்புதம் அம்மாள் மனுவைப் பரிசீலித்த முதல்வர் மே மாதம் 16-ஆம் தேதி, பேரறிவாளனுக்கு 30  நாட்கள் பொது விடுப்பு அளிக்க  உத்தரவிட்டார்.

 



 

இதனையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்புடன், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி , பரோலில் அழைத்து வரப்பட்ட பேரறிவாளனுக்கு, வீட்டில் இருந்தபடியே சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பேரறிவாளனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் ஜூன் மாததோடு முடிவடையும் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள்  தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்தார் , இதனால் ஜூலை 28-ஆம் தேடி வரை அவரது பரோலை தமிழ் நாடு அரசு நீடித்து அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த  ஜூலை 28-ம் தேதி  பேரறிவாளன் பரோல் முடிவடைந்து சிறை திரும்பவேண்டிய நிலையில்  அவருக்கு ரத்த அழுத்தம் , மூட்டுவலி  , வயிற்றுக்கோளாறு , சிறுநீரகத் தொற்று , என உடல்நிலை மோசம் அடைந்ததால் , இரண்டாவது முறையாக அவரது பரோல் , மேலும் ஒரு மாதம், அதாவது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரி நீட்டிக்கப்பட்டது .

 




இரண்டு முறை பரோல் நீடிக்கப்பட்டு , மே மாதம் 28-ஆம் தேடி முதல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்த பேரறிவாளனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூட்டுவலி  சிறுநீரக தொற்று உள்ளிட்ட தொந்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பேரறிவாளனை, அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தார் முடிவுசெய்தனர். அவரது தாய் அற்புதம்மாள், சிறைத்துறை அதிகாரிகளுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்தளி காவல் நிலைய ஆய்வாளர்  மணிமாறன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் விழுப்புரம் நகரம் , காந்தி சிலை அருகே, திமுக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தாருக்கு சொந்தமான  தனியார் மருத்துவமனைக்கு அவரை நேற்று முன்தினம் அழைத்து வந்தனர் .




 

அங்கு இரண்டு நாட்களாகச் சிகிச்சை பெற்றுவரும் பேரறிவாளன் இன்று இரவு  அல்லது நாளை காலை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குத்  திரும்புவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர் .