திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் வயது ( 56) என்ற ஆசிரியரும் பணியாற்றி வருகிறார்.


இவர் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவிகளை அடிக்கடி அழைத்து நாள்தோறும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி மாணவிகளை அடித்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களிடம் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் திருவண்ணாமலை மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் புவனேஸ்வரிக்கு புகார் அளித்துள்ளனர். 




 


அதில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலர் புவனேஷ்வரி, தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையித்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடம் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில் புகாருக்கு ஆளான ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதையடுத்து ஆசிரியர் லட்சுமணனை அனைத்து மகளிர் காவலர்துறையினர் இன்று  கைது செய்தனர். கைதான ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  , இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று  ஆசிரியரை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் லட்சுமணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இவ்வாறு பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளிடம் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



தமிழ்நாடு அரசு, இது போன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், ஆபாச மிரட்டல்கள் மற்றும் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகளிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவே உதவி மையங்கள் மற்றும் புகார் எண்கள் போன்றவற்றை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.


பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இது போன்று அவசியமற்ற செயல்களினால் வரும் பாதிப்புகளைச் சந்திப்பதோடு மட்டுமில்லாமல், அதை எதிர்கொள்வதற்கு தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை உரிய முறையில் பெற்றோர்களின் மேற்பார்வையில் அணுகுவதே அவைகளுக்குத் தீர்வாகும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் 14417- என்ற உதவி எண்ணுக்கு அழைத்து குறைகளைப் பதிவு செய்ய மறவாதீர்கள். என மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.