திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் நேற்று தமிழ்நாடு தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 540 மாணவ- மாணவிகள் இந்தி தேர்வினை எழுத வந்திருந்தனர். காலை 10 மணிமுதல் 12:30 மணிவரை இந்தி முதல் தாளும், பிற்பகல் 2 மணிமுதல் 4:30 இந்தி 2 ம் தாள் என நேரம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை அடுத்த தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியையாக பணிபுரியும் ஷபானா தேர்வு எழுத வந்துள்ளார். அனுமதி கடிதத்துடன் தேர்வு அறைக்குள் சென்ற ஷபானாவிற்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு பத்து நிமிடங்கள் தேர்வு எழுதிய ஷபானாவை தேர்வு அறை மேற்பார்வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வை எழுதக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஷபானா, அதிர்ச்சியடைந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று தெரிவிக்கவே, அப்போது இருவருக்கும் தேர்வு அறையிலுள்ளே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 




 


தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஷபானாவிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவேன் என்று நீங்கள் சொன்னால் வெளியே சென்று விடுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஷபானா ஹிஜாப் இஸ்லாமியர்களின் ஓர் அங்கம் என்றும், ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாத ஷபானா ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத மாட்டேன் என பள்ளி நிர்வாகத்திடம் கடிதம் ஒன்றை எழுதி கையொப்பம் இட்டு உள்ளார். குறிப்பாக இன்னும் சில மாணவிகள் ஹிஜாபை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இதனை அறிந்த எஸ்டிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர டிஎஸ்பி குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவியை தேர்வு எழுத விடாமல் மிரட்டும் பாணியில் பேசிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 




இதுகுறித்து மாணவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காலையில் நான் ஹிஜாப் அணிந்தபடி சுமார் 10 நிமிடங்கள் இந்தி முதல் தாள் தேர்வை எழுதி கொண்டிருந்தேன். அப்போது ரவுண்ட்ஸில் வந்த பிரின்சிபால் சார், என்னிடம் வந்து ஹிஜாபை கழட்டிவிட்டு தேர்வை எழுதுமாறு கூறினார். நான் அப்போது இல்லைசார், என்னால் ஹிஜாபை கழட்டிவிட்டு தேர்வு எழுத முடியாது என்றேன். அதற்கு அந்த பிரின்சிபால், இதுகுறித்து என்னிடம் எந்த காரணத்தை தெரிவிக்க வேண்டாம். நீங்கள் ஹிஜாப்பை கழட்டிவிட்டு தேர்வு எழுதிதான் ஆக வேண்டும் என்றார். நான் ஒரு 5 நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றுகொண்டு இருந்தேன். அப்போது, ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் மேம் என்னிடம் வந்து மிகவும் கடினமாக தொனியில் பேசி, ஹிஜாபை கழட்டிதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார். தொடர்ந்து, நான் எழுதிகொண்டிருந்த எக்ஸாம் பேடையும் எடுத்துகொண்டு வந்து வெளியே வைத்துவிட்டார்.


 


 


 




ஹிஜாப் கழட்டிவிட்டு உள்ளே வந்து எழுதினால் எழுது, இல்லையென்றால் உன்னை தேர்வு எழுதவே அனுமதிக்க முடியாது என்றும் மிரட்டினார்” என்று தெரிவித்தார்.


இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்ட பொழுது : தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் இம்முறை வாய்மொழி உத்தரவாக ஹிஜாப் அணிய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் பொழுது அதிக அளவு, மாணவர்கள் மூட்டை மூட்டையாக பிட் பேப்பர்கள் கொண்டு வந்திருந்தார்கள். இதை தடுப்பதற்காகவே, எங்கள் தரப்பிலிருந்து சற்று கடுமையாக நடந்து கொண்டோம். ' தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா ' சார்பில் கூட எங்களுடைய நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்திருந்தனர். இருந்தும் அந்தப் பெண்மணி இடம் நாங்கள், கூடுதல் நேரம் ஒதுக்கி தருகிறோம். இரண்டு தாள் பேப்பர்களையும் எழுதி விட்டுச் செல்லுங்கள் என கூறினோம். ஆனால் அவர் மறுத்து விட்டார் என்று தெரிவித்தனர்.