நடிகை திரிஷா குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து அரசியல் மற்றும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், தற்போது நடிகை நிவேதா பெத்துராஜின் எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Continues below advertisement

திருக்குறளை பகிர்ந்த நிவேத பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் எந்த விளக்கமும் இல்லாமல் திருக்குறள் 183-ஐ மட்டும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் எந்த அரசியல் தலைவரின் பெயரையோ, எந்த சம்பவத்தையோ குறிப்பிடவில்லை. இருப்பினும், அந்த பதிவு வெளியாகியுள்ள நேரம் காரணமாக, அது உதயநிதி ஸ்டாலின் பேச்சை மறைமுகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூறும் ஆக்கம் தரும்."– திருக்குறள் 183

Continues below advertisement

குறளின் விளக்கம்

இந்தக் குறளின் பொருள், பிறரைப் பற்றி பொய்யாகப் புறங்கூறி வாழ்வதைவிட அப்படிப்பட்ட வாழ்க்கையை விடுவது உயர்ந்த அறமாகும் என்பதாகும். பிறரை இழிவுபடுத்துதல், உண்மையற்ற குற்றச்சாட்டுகளை கூறுதல் போன்றவை அறநெறிக்கு முரணானவை என்பதையும், மனிதன் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் வாழ வேண்டும் என்பதையும் திருவள்ளுவர் இந்தக் குறள் மூலம் எடுத்துரைக்கிறார்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தனது எக்ஸ் பதிவில், நடிகை திரிஷாவிடம் உதயநிதி நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுக்கு அரசியல் மேடைகளில் இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நிவேதா பெத்துராஜின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. எனினும், தனது பதிவின் பின்னணி குறித்து நிவேதா பெத்துராஜ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.