திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல எண்ணி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், பெரிய செட்டிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் (32) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக போலி வெப்சைட்டில் தகவல் வெளியிட்டுள்ளார்.


இதனை நம்பி வேலை கேட்டு விண்ணப்பித்த கர்ணனனை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை உள்ளதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய கர்ணன் ரூ.2 லட்சத்தை வினோத் கண்ணன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.


பின்னர் அடுத்த நாள் வினோத் கண்ணனை தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கர்ணன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.


இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வினோத் கண்ணன் அனுப்பிய இ-மெயில் முகவரி மூலம் கண்காணித்தனர்.




இதில் நேற்று (ஆக.19) வினோத் கண்ணன் அவரது வீட்டில் இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஈரோட்டுக்கு சென்று வினோத் கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது அதில் ரூ.15 லட்சம் வரை உள்ளது தெரியவந்தது.


மேலும் அவரிடம் பணம் செலுத்தி பலர் ஏமாந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கைதான வினோத் கண்ணன் கேட்டரிங் முடித்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து காவல் துறையினர் கூறுகையில், ”தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மோசடி கும்பல் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பணம் செலுத்தினால் மூன்று மடங்கு நான்கு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடி கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


திருச்சியில் கடந்த சில மாதங்களில் பலரிடம் ஆசை வார்த்தை கூறி சிலர் மோசடி செய்துள்ளனர். இவற்றை தடுப்பதற்காக காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், விசாரணையும் செய்து வருகிறார்கள். பொதுமக்கள் இவை குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


குறிப்பாக முன்பின் தெரியாத நபரிடம் பணத்தை கொடுப்பது, தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கொடுப்பது, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்ப வேண்டாம். மேலும் நாம் செலுத்தும் பணத்தை விட மூன்று மடங்கு நான்கு மடங்கு அதிகமாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் நம்பி ஏமாற வேண்டாம்.


பொது மக்களுக்கு காவல்துறை தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலர் தொடர்ந்து இது போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன், கவனத்துடன் செயல்படும் வேண்டும்” என அறிவுரை வழங்கி உள்ளனர்.