எம்.ஜி.ஆரின் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு விழா -  அம்மாவின் பிறந்த நாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்று ஓ.பி.எஸ் தெரிவித்து இருந்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் அவர் பங்கு பெறவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், கர்நாடக  மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி பொன்மலை ஜி கார்னர்  மைதானத்தில் முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய ஒ.பன்னீர் செல்வம்  பேசியது..  தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆரால்  உருவாக்கப்பட்ட இயக்கம் மட்டுமல்ல, யார் தலைமை என்று தீர்மானிக்க வேண்டும் என்பதை தொண்டர்கள் நிர்ணயிக்கும் இயக்கமாக உள்ளது.  இந்த இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் அமைப்பு ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சட்ட விதியை பறித்து ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது.




மேலும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா தான் என்ற உச்சபட்ச அங்கீகாரத்திலிருந்து தற்போது அம்மாவை நீக்கி ஒரு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஜெயலலிதா அ.தி.மு.கவை வழி நடத்திய பாதையில் நாம் இயக்கத்தில் பயணித்து வருகிறோம். அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அ.தி.மு.கவின் காவல் தெய்வமாக இருந்தார். அ.தி.மு.கவில் அமைப்பு ரீதியான தேர்தலை தொண்டர்களுக்கான உரிமையை அளித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடத்தினார்கள். ஆனால் இன்று சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்ட விதிகளை மதிக்காமல் புதிதாக சட்டத்தை உருவாக்கி தேர்தலை நடத்தி உள்ளார்கள். எம்.ஜி.ஆரை தி.மு.கவிலிருந்து நீக்கிய பிறகு அவருக்கு இருந்த எண்ணத்தின் அடிப்படையில் தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என சட்ட விதியை உருவாக்கினார். ஜெயலலிதா அதனை பின்பற்றியதால் தான் அவருக்கான உச்சபட்ச மரியாதையாக அவருக்கு நிரந்தர பொதுச்செயலாளராக தொண்டர்கள் அறிவித்தார்கள். அந்த மரியாதையை ரத்து செய்துள்ளது இந்த சதிகார கூட்டம்.




நான் மட்டும் பெரியாரின் பேரன் அல்ல அ.தி.மு.க வில் இருக்கும் ஒன்னறை கோடி பேரும் பெரியாரின் பேரன் தான். நாம் மீண்டும் தொடங்கிய தர்ம யுத்தம் எந்த வித பிசுறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இறுதியில் நாம் தான் வெற்றி அடைய போகிறோம். நம்முடைய சக்தியை நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் மாநாடு இருக்கும். அதற்கு முன்னுரை எழுதும் கூட்டம் தான் இந்த கூட்டம். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நம் பலத்தை காட்டுவோம்.  நம் எண்ணம் செயல் எதுவாக இருந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் நாம் செல்வதற்கு மாநாடு அடித்தளமாக இருக்கும். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் கூறியது..  சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடைபெறும். மக்களையும் நாங்கள் சந்திப்போம்.  ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் மாநாடு கழகத்தின் சட்ட விதியை அபகரித்த சர்வாதிகார கும்பலின் நீக்கும் மாநாடாக அமையும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு தந்த உரிமை மீட்டெடுக்கப்படும்.  உறுதியாக சட்டப் போராட்டத்திலும் நாங்கள் வெல்வோம். எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் பணியாற்றிய அனைவரையும் ஒன்றிணைத்து  இந்த இயக்கத்தை மீண்டும் நடத்துவோம். 




சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா அனைவரையும் ஒருங்கிணைத்து எப்படி இந்த இயக்கத்தை நடத்தினார்களோ அதுபோலவே நாங்களும் நடத்துவோம் சசிகலாவையும் தினகரனையும் நேரில் சென்று அழைப்பீர்களா என்கிற கேள்விக்கு?  பொறுமையாக இருந்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்றார்.  மாநாட்டிற்குப் பின்பு ஓபிஎஸ் அணியின் நிர்வாகத்தில் மாற்றம் வருமா என்கிற கேள்விக்கு யூகமான கேள்வியாக உள்ளது என பதில் அளித்தார். ஒன்றரை கோடி தொண்டர்களின் குரலாகவே நாங்கள் ஒலிக்கிறோம்.   தொண்டர்கள் நினைத்தால் மீண்டும் இந்த இயக்கத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும்.  கர்நாடக தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் இரட்டை இலையை நாங்கள் கேட்டு பெறுவோம். பாஜக தேசிய கட்சியாக இருக்கிறது, அவர்கள் எண்ணத்தின் படி செயல்படுகிறார்கள் நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் வழியில்  செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.  எடப்பாடி அணிக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பதாக இருப்பது தோற்றம் தானே தவிர உண்மை அல்ல. ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவுடன் ஆன்லைன் ரம்மி எதிரான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது நல்ல ஏற்பாடு என தெரிவித்தார்.