திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோவில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடந்தது.


திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே வாளசிராமணி ஊராட்சி வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது. இதையொட்டி அச்சப்பன், அகோர வீரபத்திரன், மதுரைவீரன், வெடிகாரகுள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பக்தர்கள் தீபம் ஏற்றினர். பின்னர் கோவில் வளாக பகுதியில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை அலங்கரித்து பல்லக்கில் ஊர்வலமாக காட்டு கோவிலுக்கு சுமந்து சென்றனர். அப்போது கோவிலை சேர்ந்த சேர்வைக்காரர்கள், பூசாரிகள் தப்படித்து நடனம் ஆடினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதனிடையே காட்டுகோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைமுடிகளை அவிழ்த்து கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கோவில் பூசாரி பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு முதல் 5-க்கும் மேற்பட்ட மேற்பட்ட சாட்டையடி வாங்கினர். பின்னர் சாட்டையடி வாங்கிய பெண்கள் கோவிலுக்கு சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்தும், விபூதி பிரசாதம் வாங்கியும் சென்றனர்.




மேலும், இந்த விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் பில்லி, சூனியம், பேய் பிடித்தல், காத்து கருப்பு ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டி கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் கோவில் முன்பு விளக்கேற்றியும், தேங்காய் பழம் உடைத்தும் வழிபட்டனர். மேலும் கோவிலுக்கு பக்தர்கள் ஆடுகளை காணிக்கையாகவும் வழங்கினர். இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.