திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம்,  மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன.பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

Continues below advertisement

குறிப்பாக கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோவில் திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. ரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும்.

Continues below advertisement

இத்தகைய பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட  ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேரினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , மண்டலம் 3ன் தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர் மோகன் ஆகியோர் தேரின் புறப்பாடினை உற்சவர்  மண்டபத்தில்  துவக்கி வைத்து, தேரினை  மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தினர்.

முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து உற்சவ காலங்களில் வேண்டும் பக்தர்கள் ரூபாய் 1000 கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் என கோயிலின் அதிகாரிகள் தெரிவித்தனர்.