தஞ்சாவூர்: திருச்சியின் தொழில்துறை உள்கட்டமைப்பு நிலை வருமா? வராதா? தாமதமாகிக் கொண்டே இருக்கிறதே என்று மனவேதனையுடன் திருச்சி மக்கள் உள்ளனர். இம்முறை வாக்குறுதி அளிப்பதை விட வேட்பாளர்கள் செயல்படுத்தி காட்ட வேண்டும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Continues below advertisement

இந்தியாவின் எரிசக்தி உபகரணங்கள் மற்றும் ஃபேப்ரிகேஷன் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருச்சி, கடந்த ஆறு தசாப்தங்களாக மின் உற்பத்தி நிலைய கூறுகளின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்றால் மிகையில்லை. ஆனால், நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய பெரிய 'ஆங்கர்'  தொழிற்சாலைகளுக்காக இப்போதும் காத்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில், வெறும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மட்டும் தொழில்துறையினரின் வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடாது; மாறாக, நிலுவையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தும் அரசியல் உறுதிப்பாடே வெற்றியைத் தீர்மானிக்கும்.

Continues below advertisement

காவிரி டெல்டாவின் நுழைவாயிலான திருச்சிக்கு மிக நீண்ட தொழில்துறை வரலாறு உண்டு. 1928-இல் தொடங்கப்பட்ட பொன்மலை ரயில்வே பணிமனை, 1964-இல் வந்த பெல் (BHEL) நிறுவனம் மற்றும் 1966-இல் அமைக்கப்பட்ட துப்பாக்கித் தொழிற்சாலை போன்றவை திருச்சியின் மிகப்பெரிய அடையாளங்கள். இருப்பினும், நவீன யுகத்தில் செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் மென்பொருள் மேம்பாடு போன்ற அதிக ஊதியம் தரும் துறைகளில் திருச்சி இன்னும் கால்பதிக்கவில்லை என்பதும் வேதனையாகும்.

திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகள் நேரடியாகத் தொழில்துறை முதலீடுகளைச் சார்ந்துள்ளன. பெல் போன்ற பாரம்பரிய நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்காமல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் ஒரு பகுதியைத் திருச்சிக்கு அரசு திசை திருப்ப வேண்டும் என்பதே தொழில் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. அப்போதுதான் வேலைக்காக இளைஞர்கள் வெளியூர்களுக்குப் புலம்பெயர்வது குறையும். திறன்மிக்க இளைஞர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பை சொந்த ஊரிலேயே ஏற்படுத்தும்.

திருச்சி வர்த்தக மையம், பாதுகாப்புத் தொழில் வழித்தடம், வேளாண் தொழில் வழித்தடம் மற்றும் சிப்காட் பூங்காக்களில் பெரிய தொழிற்சாலைகள் எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவை இன்னும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் வேதனையே. மணப்பாறை சிப்காட் பூங்காவிற்கு ஜேபில் மற்றும் ஜிண்டால் போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் அதனால் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. பஞ்சப்பூரில் அமையவுள்ள டைடல் பார்க் மற்றும் எல்காட் இரண்டாம் கட்ட ஐடி பூங்கா போன்றவற்றை ஆளுங்கட்சியான திமுக தனது சாதனையாக இருந்தாலும், 5 ஆண்டுகளாகத் தாமதமாகும் திருச்சி வர்த்தக மையத் திட்டம் மக்கள் மத்தியில் வருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது என்பதுதான் உண்மை.

திருவெறும்பூர் மற்றும் திருச்சி மாநகரத் தொகுதிகள் ஓரளவு தொழில்துறைப் பலன்களைப் பெற்றாலும், துறையூர், முசிறி, லால்குடி மற்றும் மணப்பாறை போன்ற தொகுதிகள் தொழில்துறையில் மிகவும் பின்தங்கியே உள்ளது என்பதுதான் உண்மை. மருங்காபுரி, உப்பிலியபுரம் மற்றும் தொட்டியம் போன்ற பகுதிகளில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். திருச்சியின் தொழில்துறை சூழலை மேம்படுத்த ஒரு பெரிய ஐடி நிறுவனம் தனது அலுவலகத்தைத் திருச்சியில் திறக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஏற்றுமதியை அதிகரிக்க உலர் துறைமுகம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும். வரும் தேர்தலில், பழைய வாக்குறுதிகளைத் தாண்டிச் செயல்பாடுகளை நிரூபிக்கும் வேட்பாளர்களுக்கே தொழில்துறையினர் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.