ஆடம்பரமாக வாழ நினைத்தவர்... இன்னைக்கு கம்பி எண்ணிக்கிட்டு இருக்காரு - அப்படி அவர் என்ன செஞ்சாரு?
ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனதில் தீராத ஆசை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு என்ன செய்வது என்று யோசித்தவரின் மூளை குறுக்குசால் ஓட்டியது.

திருச்சி: ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு கள்ளநோட்டு அச்சடித்து வெளிநாட்டு உல்லாசப்பயணம் செய்தவரை தட்டித் தூக்கியது திருச்சி போலீஸ். அன்னைக்கு கள்ளநோட்டை எண்ணியவர்... இன்னைக்கு கம்பி எண்ணிக்கிட்டு இருக்காரு.
திருச்சி,சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதாண்டாகுறிச்சியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் அனி பவுல்ராஜ் (50). தற்காலிக மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். தற்காலிக பணி என்பதால் போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இதனால் அவர் வாழ நினைத்த வாழ்க்கைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனதில் தீராத ஆசை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு என்ன செய்வது என்று யோசித்தவரின் மூளை குறுக்குசால் ஓட்டியது. அப்படி அவர் தேர்ந்தெடுத்த குறுக்குப்பாதை தான் கள்ள நோட்டு அச்சடிப்பது.

அப்புறம் என்ன இருக்கவே இருக்கு இன்டர்நெட். என்ன செய்யணும்... விபரங்களை பக்காவாக சேகரித்தார். அடுத்தது... கள்ள நோட்டு அடிக்க தேவையான கலர் பிரிண்டர், இங்க், வெள்ளை பேப்பர் ஆகியவற்றையும் வாங்கினார். ஆரம்பத்தில் கொஞ்சம் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். யாராலும் கள்ள நோட்டு என்று ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம் என்ன கள்ளநோட்டுகள் இவரது வாழ்க்கையை மாற்ற... செழிப்பான, அவர் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார். வெளிநாடுகளுக்கு உல்லாச பயணம் எல்லாம் போய் வந்ததாக கூறப்படுகிறது.
இவரது ஆடம்பர வாழ்க்கையும், நடவடிக்கையும் அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கு. இதற்கிடையில் அதிகமாக கள்ளநோட்டுகள் அந்த பகுதியில் புழங்க மக்கள் உஷாராகி உள்ளனர். மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கள்ள நோட்டு புழக்கம் அச்சத்தை ஏற்படுத்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி.., செல்வ நாகரத்தினத்திற்கும் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விசாரியுங்கள் என்று எஸ்.பி., உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்துள்ளது. இதில் அனிபவுல்ராஜ் மீதான சந்தேகத்தை உண்மை என போலீசாருக்கு தெரிய வந்தது.
இந்நிலையில் ஆளவந்தான் நல்லூர், மேட்டுத் தெரு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அனி பவுல்ராஜை தனிப்படையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரது சட்டை பையில் 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ய அவை கள்ள நோட்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், இங்க், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் அனி பவுல்ராஜ் மீது BNS178,179, 180, 181 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இப்போது சிறையில் கம்பிகளை எண்ணுகிறார். குறுக்குப்பாதை ஆரம்பத்தில் உல்லாசமாகதான் இருக்கும். ஆனால் அதன் பின்னர் வாழ்க்கையே நரகம் ஆகிவிடும் என்பதற்கு அனிபவுல்ராஜ் ஒரு உதாரணம் என்றால் மிகையில்லை. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை நிரூபித்துவிட்டார்.






















