திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயலூர் சாலை உய்யக்கொண்டான் பாலம் அருகில் 25 ஆவது வார்டில் 371 பயனாளிகளுக்கு ரூபாய் 1.19 கோடி மதிப்பில் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட  பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். பின்பு  திருச்சி குளுமாயி அம்மன் கோயில் அருகே கோரையாற்று கரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு சாலைகள் அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் ரோடு குடமுருட்டி வரை உய்யகொண்டான், கோரையாறு கரைகளை 8 மீட்டர் வரை அகலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு சுமார் 2 லட்சம் வாகன ஒட்டிகள் பயன் பெறுவார்கள் என்றார். இதே போன்று உய்யகொண்டான் - அல்லித்துறை சாலையும் அகலப்படுத்தப்படும். திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதால் சாலைகள் பழுதடைந்துள்ளது. மழைக் காலத்துக்கு முன்னதாக இப்பணிகள் முடிவடைந்து புதிய தார் சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.




மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு என்னை தேவையில்லாமல் பிரச்னையில் மாட்டிவிட வேண்டாம் என தெரிவித்து புறப்பட்டு சென்றார். முன்னதாக திருச்சி குடமுருட்டி, உய்யகொண்டான் உள்ளிட்ட பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் மேம்பாடு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் சாய்குமார் நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண