திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஸ்டார் ஓட்டல் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓய்வறைகள் வணிக மற்றும் விஐபிக்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், பாங்காக், மஸ்கட், தோஹா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் அதிக அளவிலான பயணிகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிக அளவிலான பயணிகள் சென்று வந்துள்ளனர்.

மேலும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் அதிக அளவிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக சுமார் 6 ஆயிரம் பயணிகள் வரை கையாளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையம் தென் ஆசியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

2025-ம் ஆண்டு ஜனவரியில் புதிய உச்சத்தை எட்டிய திருச்சி விமான நிலையம் ஏப்ரலில் 1,17,072 சர்வதேச பயணிகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இச்சாதனை திருச்சியின் உலகளாவிய இணைப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம், கடந்தாண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதிக விமான சேவைகள், பயணிகளைக் கையாள்தல் ஆகியவற்றால் தமிழக அளவில் திருச்சி விமான நிலையம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ளதைப்போல திருச்சியில் பயணிகள் மற்றும் வணிக ரீதியிலான ஓய்வு அறைகள் இல்லை.

எனவே, புறப்பாடு பகுதியில், சர்வதேச விமான நிலையத்தில் உள்ளதைப் போல உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, இந்தியா விமான நிலைய ஆணைய குழுமம் உத்தரவின்படி, திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் 3-வது மாடியில் பயணிகளுக்கான ஓய்வறைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த பெங்களூரு ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், வெளிநாடு மற்றும் உள்நாடு செல்லும் பகுதிகளில் எக்ஸிகியூடிவ் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கான ஓய்வறைகளை அமைத்துள்ளது.

பல லட்ச ரூபாய் செலவில் ஸ்டார் ஓட்டல் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறைகளில், திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மையப்படுத்தி, உள் அலங்காரம் மற்றும் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் இருக்கைகள், நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வறைகள், வணிக மற்றும் விஐபிக்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ள திருச்சி விமான நிலையத்தில் ஓய்வறைகள் கட்டப்பட்டுள்ளது அதிக வரவேற்பை பெற்றுள்ளது.