தமிழ்நாட்டில் பண்டிகை நாட்கள் என்றாலே பொதுமக்கள் அவரவர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். 


இதனை தொடர்ந்து இம்மாதம் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி திருவிழா நடைபெற உள்ளதால் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் சேவையை அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பக்கோணம் லிட் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது..


நாளை (07.09.2024) மற்றும் (08.09.2024) ஞாயிறு வார விடுமுறையை ஒட்டியும் வேளாங்கண்ணி திருவிழாவையொட்டியும், (06.09.2024) மற்றும் (08.09.2024) முகூர்த்த நாளையொட்டியும், (07.09.2024) விநாயகர் சதுர்த்தியொட்டியும், பொது மக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக் சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது. 




தொடர் விடுமுறை என்பதால் 350 சிறப்பு பேருந்துக்கள் இயக்கம் 


சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம். வேளாங்கண்ணி, திருவாரூர் மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும். கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி புதுக்கோட்டை தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 150 பேருந்துகள் என கூடுதலாக (06.09.2024) (07.09.2024) மற்றும் (08.09.2024) வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மொத்தம் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.


அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல (08.09.2024) மற்றும் (09.09.2024) ஞாயிறு, திங்கள் நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்


மேலும், (07.09.2024), (08.09.2024), நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே. பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் - முன் பதிவு செய்து கொள்ளலாம்.


மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள். பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.