புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே மண்டையூர் பகுதியை சேர்ந்த விவசாயி ரெங்கசாமி (60) இவரது மனைவி வள்ளி (57). ரெங்கசாமி நாவலிங்ககாடு பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கேயே குடியிருந்து வந்தார். அவருக்கு பாலசுந்தர் (24), கோபி (22) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.  கோபி என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பாலசுந்தர் கேட்டரிங் படித்து இருந்தார். இந்நிலையில் பாலசுந்தர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் போகாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். மேலும் அவரது தாய் தந்தையிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் பாலசுந்தரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தனது மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் ரெங்கசாமியிடம் சென்று உனது மகனுக்கு முனி பிடித்துள்ளது. அதனால் உடுக்கை அடிக்கும் பூசாரியை வரவழைத்து உனது மகனுக்கு பிடித்துள்ள முனியை விரட்டலாம் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய ரெங்கசாமி  நேற்று உடுக்கை அடிக்கும் ஒரு பூசாரியிடம் தொடர்புகொண்டு இரவு 7 மணி அளவில் தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

 



 

இந்த தகவல் பாலசுந்தருக்கு தெரியவந்தையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் ரெங்கசாமி அவரது வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி வள்ளி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பாலசுந்தர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தனது தந்தையிடம் சென்று வீட்டிற்கு வருமாறு அவரை அழைத்து வந்துள்ளார். பின்னர் மாலை 5.45 மணியளவில் ரெங்கசாமியின் வீட்டில் வழக்கமாக பால் கறந்து செல்லும் பால்காரர் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் உட்கார்ந்திருந்த பாலசுந்தரிடம் பால் கறக்க வேண்டும் உன்னுடைய அப்பா அம்மா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.  தொடர்ந்து பால்காரர் அவர்களது வீட்டை ஒட்டிய தாழ்வாரத்தில் அமைக்கப்பட்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்தபோது ரெங்கசாமி அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

 



 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் அருகில் உள்ளவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் காவல்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மண்டையூர் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கீரனூர் துணை காவல் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் ஆகியோர் மண்டையூருக்கு சென்று  தம்பதியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று மீண்டும் நடந்து வீட்டிற்கு வந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து தம்பதியினர் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்டையூர் காவல்துறை இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பாலசுந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவூர் அருகே கணவன்-மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.