திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த  பேருந்து நிலைய திட்டம் ஆகும். தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக  460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்வரைவு திட்டம், சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புதிய பேருந்து நிலையம், திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள 575 ஏக்கர் அரசு நிலத்தில் கே.சாத்தனூர் மற்றும்  பிராட்டியூர் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட 115.68 ஏக்கர் இடம் தேர்வு செய்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின்  ஆலோசனையின் பேரில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.




புதிதாக அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில், நகர பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் என தனித்தனியாக அமைக்கப்பட உள்ளதாகவும்,  சரக்கு முனையம் என்பது, திருச்சி மக்களின் நீண்டநாள் கனவாக உள்ளது, எனவே இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்தின் கீழ், சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது. திருச்சி–புதுக்கோட்டை, திருச்சி–திண்டுக்கல் மற்றும் திருச்சி சென்னை வழித்தடங்கள் எளிதில் அணுகக் கூடிய பகுதியாக இது உள்ளது. சரக்கு முனையத்தை அமைக்க, உள்ளாட்சி நிர்வாகம் இதை சிறந்த இடமாக அங்கீகரித்து உள்ளது. மேலும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் லாரிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றன. இதுமட்டுமல்லாது, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 2,245 பேருந்துகளும், 7,975 பேருந்து சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள மத்திய பேருந்து நிலையத்தை நாள்தோறும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2006ஆம் ஆண்டிற்கு பிறகு, இடப்பற்றாக்குறை காரணமாக இது மேம்படுத்தப்படவே இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.



அதன் ஒரு பகுதியாக பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி பேருந்துக்கள் நிறுத்துமிடம், தொலைதூர அரசு விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், நிறுத்துமிடம் என ஆகியவற்றுடன் கூடியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் ரூபாய் 460 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தனர். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் மண் பரிசோதனை செய்துள்ளனர். 115 ஏக்கரில் தேர்வு செய்யபட்ட 70 இடங்களில் இருந்து மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன, இவற்றைக்கொண்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மை, தாங்கும் திறன் ,உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு அது குறித்து முழு விவரங்களுடன் கூடிய அறிக்கையை ஓரிரு நாட்களில் மாநகராட்சியிடம் அளிக்கப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு தொடர்ந்து நிலத்தை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக இது போன்ற சோதனை தரம் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு என்ஐடி குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.ஆனால்  முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.