திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக திருட்டு, வழிபறி, சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்லும் போதும், பேருந்துக்களில் பயணம் செய்யும் போது திருட்டு நடப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

 

இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் முக்கிய இடங்களில்  சிசிடிவி கேமரா மூலம்  தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் குற்றசம்பவங்களை பற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து காவல்துறை சார்பில் அவ்வபோது விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.   திருச்சி மாநகரில் பேருந்துக்களில்  சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் பேருந்து  நிலையம் மற்றும் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 



 

இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பேருந்துக்களின்  உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆணையர்  காா்த்திகேயன் பேசியது.. 

தனியார் பேருந்துக்களில்  திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குடிபோதையில் பேருந்து டிரைவர், கண்டக்டர், பொதுமக்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களில் எதிரிகளை எளிதில் அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமரா பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பேருந்துக்களில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்றார்.  மேலும் தனியார் பேருந்து  டிரைவர்கள் அபாயகரமாக பஸ்சை ஓட்டுவதை தவிர்க்க அறிவுரை அளிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறைக்கும், பேருந்துக்களின்  உரிமையாளர்களுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. சட்டத்தை மதிக்காமல் செயல்படுவோர் மீது சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

 



 

இதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தில்  கண்காணிப்பு கேமரா பொருத்த முன்னுரிமை கொடுத்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளின் புகைப்படத்தை கண்டக்டரிடம் கொடுத்து குற்றம் நடைபெறாத வகையில் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்தனர். கூட்டத்தில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சக்திவேல் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.