தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி 31 ஆயிரத்து 8 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  கருணாநிதியின் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கபட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.




இதனைத் தொடர்ந்து  திருச்சி மாவட்டம் மணிகண்டம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 195 பள்ளி குழந்தைகளுக்கு   காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா,  உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி ,  மற்றும் அரசு அலுவலர்கள்,  பெற்றோர்கள்,  பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


ஏற்கனவே திருச்சி மாநகரில்  உள்ள மரக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மைய சமையல் கூடம் ரூபாய் 1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த சமையல் கூடத்தில் தினம்தோறும் காலை உணவை சமைத்து திருச்சி மாநகராட்சியில் உள்ள 40 அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 8 மணிக்குள் உணவு சென்றடைய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால்  திருச்சியில் சுமார் 2,563 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறு வருகிறார்கள்  என அதிகாரிகள் தெரிவித்தனர்.




இந்நிலையில் இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள 35 பள்ளிகளில் பயிலும் 6,193  மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள்  என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மொத்தம் திருச்சி மாநகரில் 75 பள்ளிகளில் பயிலும்  8,756 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.