தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை மிக கனமழை எனத் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும் அவற்றை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை  குறிப்பாக பல இடங்களில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கோவை மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஃப்ளூ காய்ச்சல் பரவல் என்பது பரவலாக உள்ளது. இந்நிலையில் தான் கோவை மக்களுக்கு அந்த மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது..  கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக்கூடும் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.




மேலும், மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வரலாமல் தடுக்கலாம். மேலும் காய்ச்சல் கண்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மாவட்த்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விபரங்களை அரசு, தனியார் மருத்துவனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.




இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே வேளையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் நோயால்  பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.




இந்நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப் படுத்தி உள்ளது. அதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களை சுற்றி கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் குப்பைகள் அல்ல படாமலும், தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர.