திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி மாவட்டக் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. விவசாய அணி தலைவர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தி.மு.க. விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 




மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, "வறட்சி மாவட்டங்கள் எல்லாம் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டன. காவிரி, டெல்டா மாவட்டங்கள் மட்டுமே நஷ்டத்திலும் விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே, நெல் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் கருணாநிதி பெயரில் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்படும். ஏற்கெனவே முதல்வரிடம் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது என்றார். நம் நாட்டின் முதுகெழும்பு விவசாயம், விவசாயிகள் தான். ஆனால் தொடர்ந்து விவசாயம் அழிந்து வருகிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்தை பாதுக்காக வேண்டும். மேலும் திமுக அரசு ஆட்சிkகு வந்த பிறகு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக நிதிநிலை நெருக்கடியிலும் விவசாயத்திற்கு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆகையால் நாம அனைவரும் கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். அதேசமயம் மக்கள் மத்தியில் திமுக அரசு செய்த திட்டங்களை எடுத்து கூற வேண்டும்” என்றார். 




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: தி.மு.க. அரசு தான் விவசாயிகள் வங்கி கடனை தள்ளுபடி செய்தது. கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார். கடந்த ஆட்சி காலத்தில் எந்த கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால், தேர்தல் நெருங்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெற்று அறிவிப்பை அறிவித்துவிட்டு சென்றார்கள். அதற்கும் நிதி ஒதுக்கி முதலமைச்சர் விவசாயிகளை காப்பாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் செய்யாமல் விவசாயிகளுக்கான முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார் என்றார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, தமிழக அமைச்சர் ஒருவருக்கு தனிநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்துக்கு உரியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி என்று கூறுவது தண்டனைக்குரியது. அந்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்வோம். இது போன்ற மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது என்றார்.