திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருச்சியில் ரூ.387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வருகிற (ஜூன்) 26-ந் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தந்து காலை 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனது. இந்த நிலையில் அதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.






 


இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப்பாதையாக இருக்கும் வகையில் கட்டினார். ஆனால் இது குறுகலாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது. இதில் சில புதிய விஷயங்களை கொண்டுவர உள்ளோம். அதை முதல்வர் தெரிவிப்பார். திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அது ரூ.130 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் – வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்” என்றார்.




இதனை தொடர்ந்து மேகதாது புதிய அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, “நான் திருச்சி மந்திரி, என்னிடம் திருச்சி கேள்விகளை மட்டும் கேளுங்கள்” என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண