அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதலாக பட்டாசை சேமிக்க கூடாது. 18 வயதிற்குட்பட்டவா்களை பட்டாசு விற்பனையில் ஈடுபடுத்தக்கூடாது. தீத்தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.  மேலும் அவசரகால வழிகள் எளிதில் வெளியறேக்கூடியதாக இருக்க வேண்டும். பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளூர் ஆட்களை பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகே புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது. இதுகுறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். பட்டாசு இருப்பு குறித்து இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி அன்றாடம் பதிய வேண்டும். உரிமைதாரர் மற்றவர்களுக்கு பட்டாசு கடையை வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள லேபிள் ஒட்டிய பட்டாசுகளை அதற்குரிய பெட்டிகளில் மட்டுேம வாங்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும்.


பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பிலும், விற்பனையிலும் ஈடுபடுங்கள். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் வெடி பொருட்களை சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும், அனுமதிக்கப்படாத இடங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாத இடங்களில் வெடிபொருட்களை வைப்பது உள்ளிட்டவை குறித்து சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் திருமானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமானூர் அருகே ராஜேஷ்குமார் என்பவர் அனுமதி பெறாத இடத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான 88 மூட்டை நாட்டு வெடிகள், 63 அட்டைபெட்டிகளில் சிவகாசி பட்டாசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குகன் பட்டாசு கடை உரிமையாளர் ராஜேஷ்குமார்(37) மற்றும் கடையின் மேலாளர் சத்தியமூர்த்தி(31) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவான ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.