தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரையில் (14-ந்தேதி) 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். 




மேலும், கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் திறந்த வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்றவும், டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 தாலுகா மருத்துவமனைகள், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களாகவே மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டரை அணுகி தேவையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி, ஏர் கூலர், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒரு முறை பிளீசிங் பவுடரை கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலர வைத்து பிறகு தண்ணீரை நிரப்பி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி, அவைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் விழிப்புணர்வுடன் பாதுகாத்து கொள்ள வேண்டும்.




மேலும் தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் விவரங்கள் உடனடியாக பெறப்பட்டு, அப்பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகை தெளிப்பான்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சலில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் தற்காத்துக் கொள்ள வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.