திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வடமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இதில் சிலர் அம்மா மண்டபம் படித்துறைக்கு சென்று காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு செல்கிறார்கள். இதனால் ஸ்ரீரங்கம், அம்மாமண்டப பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் யாசகம் வாங்குவதற்காக அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலையோரம் தங்கி, பக்தர்கள் கொடுக்கும் உணவு பொட்டலங்களை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இவர்கள் இரவு நேரத்தில் அங்கு சாலையோரம் உள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் அம்மாமண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. தாறுமாறாக ஓடிய அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீதாபுரம் அருகே தனியார் திருமணமண்டபம் எதிரே நடைபாதையில் தூங்கிக்கொண்டு இருந்த யாசகர்கள் மீது ஏறி இறங்கியது. மேலும், அங்கிருந்த மேற்கூரை இரும்புத்தூணையும் இடித்து தள்ளியது.




மேலும் இதில் சாலையோரம் படுத்து இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறி துடித்தனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் 500 மீட்டர் தொலைவு சென்று அங்குள்ள சந்து பகுதியில் திரும்பியது. இதைக்கண்ட பொதுமக்கள் விரட்டிச்சென்று காரில் இருந்த 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். மேலும் உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கார் ஏறி இறங்கியதில் 70 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட 2 பேரும் சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்தது காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த லெட்சுமிநாராயணன் (வயது 24) என்பதும், உடன் வந்தவர் அதேபகுதியை சேர்ந்த அஸ்வந்த் என்பதும் தெரியவந்தது.




இதனை தொடர்ந்து ஸ்வந்திற்கு கார் ஓட்டி பழகி கொடுப்பதற்காக இவர்கள் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு அம்மாமண்டப பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லெட்சுமி நாராயணனை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே காரின் டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காரை ஓட்டி வந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் கார் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது நடைபாதையில் காரை ஏற்றிய வேகத்தில் தூணின் இரும்பு கம்பி குத்தியதில் டயர் வெடித்ததா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விபத்தில் இறந்த 3 பேர் யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. அவர்கள் யாசகம் பெற்று பிழைத்து வந்ததால், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருச்சியில் கார் மோதிய விபத்தில் யாசகர்கள் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.