தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். மேலும், 12 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவைகளையும் தொடங்கி வைத்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவையான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் (Palliative Care), இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy) மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டையாலிசிஸ் செய்துகொள்வதற்கான (CAPD) பைகள் வழங்குதல் போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.  





மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 10,969 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 4,848 இடைநிலை சுகாதார செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள், 2,650 ஆஷா பணியாளர்கள் சேவைகளை வழங்கி வருகிறார்கள்.  இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 463 வாகனங்களில், ஒரு இயன்முறை பணியாளர் மற்றும் ஒரு நோய் ஆதரவு செவிலிலியர் அடங்கிய 463 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின் முதல் பயனாளியான கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் திருமதி சரோஜா அவர்களுக்கு 5.8.2021 அன்றும், 50 இலட்சத்து ஒன்றாவது பயனாளியான செங்கல்பட்டு மாவட்டம், சித்தாளப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 75 வயதுடைய பாஞ்சாலை அம்மாள் 23.02.2022 அன்றும் முதலமைச்சர் அவர்களால் மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.  இன்று திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருமதி மீனாட்சி அவர்களுக்கு  முதலமைச்சர் அவர்கள் மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.  இந்த திட்டத்தின் சேவையை மேலும் மேம்படுத்திட 10,969 பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் 15,366 அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு இரத்த அழுத்தம் கண்டறியும் டிஜிடல் இரத்த அழுத்த கருவிகளை (Digital B.P. Apparatus)  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.  





முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
4.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவப் பதிவேடு அறை,  கருத்தரங்கு கூடம் மற்றும் விரிவுரைக் கூடம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் பிரிவுக் கட்டடம், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தலா 1.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையங்கள், திருப்பூர் மாவட்டம், நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், வேலூர் மாவட்டம், மேல்பட்டியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், என 12 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறைக் கட்டடங்களை  முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவைகளை தொடங்கி வைத்தல்


விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை கதிரியக்க டெலிகோபால்ட் கருவி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அரசு காசநோய் மருத்துவமனையில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி ஆகிய மருத்துவக் கருவிகளின்  சேவைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  





மேலும், 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு எனும் இலக்கை அடைய, காசநோய் மற்றும் மருந்து எதிர்ப்பு காசநோய் (MDR-TB) ஆகியவற்றை உடனடியாக கண்டறியும் CB - NAAT என்ற 46 புதிய  கருவிகள் பெறுவதற்கான ஆணைகளை  முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்திடும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்திடும், பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள மூன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய தரச் சான்றிதழ்கள் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள மூன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெற்ற தேசிய தரச் சான்றிதழ்களை மருத்துவ அலுவலர்கள் முதலமைச்சர் காண்பித்து, வாழ்த்துப் பெற்றார்கள்.