ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை ஒவ்வொரு கல்லூரி மாணவ மாணவிகளும் அவசியம் காணவேண்டும்-கனிமொழி




ஆதிச்சநல்லூர். தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஸ்ரீவைகுண்டம் அருகே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய பரம்பு. இந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு டாக்டர் ஜாகோர் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் கண்டுபிடித்த பொருட்களை அவரது நாட்டிற்கு கொண்டு சென்றார்.




அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை உருவாக்கப்பட்டு ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தது. இதையடுத்து தொடர்ந்து பல கட்டங்களை இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்துள்ளது. இந்த அகழாய்வு பணியில் ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3500 ஆண்டுகள் பழமையானது என்று உறுதியானது. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.




இதையடுத்து அதற்கான பணிகளை தொடங்கி அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த அகழாய்வு பணியில் தங்கம், வெண்கலம், இரும்பால் ஆன பொருட்கள், மண்பாண்டத்தில் ஆன முதுமக்கள் தாழிகள், பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.ஏ, பி, சி என்ற மூன்று பிரிவுகளாக நடந்த அகழாய்வு பணியில் பி மற்றும் சி பிரிவுகளில் அதிகமாக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பி சைட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த சைட் மியூசியம் என்பது தொல் பொருள்களை எடுத்த இடத்தில் அப்படியே காட்சிப்படுத்துவதே ஆகும். அப்படித்தான் இந்த பி சைட்டில் முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் வைத்து அதன் மேலே கண்ணாடி பேழைகள் மூலம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.




உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் இங்கு வந்து இந்த சைட் மியூசியத்தினை பார்வையிட்டு பாராட்டியும் செல்கின்றனர். கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அப்போது இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. எனவே நீங்கள் எங்களை தொல்லியல் சார்ந்து நமது பண்பாடு சார்ந்து இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கனிமொழி எம்.பியிடம் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். நிச்சயம் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கனிமொழி அவர்களின் ஆசையை நிறைவேற்றினார்.


இதற்காக இன்று கீழவல்லநாடு மாவட்ட மாதிரி பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து 4 பேருந்துகள் மூலம் 200 மாணவ மாணவிகளை ஆதிச்சநல்லூருக்கு அழைத்து வந்தார். அப்போது அந்த பேருந்துகளில் மாணவ மாணவிகளுடன் பயணம் செய்தார். மாணவ மாணவிகளுடன் ஆதிச்சநல்லூர் பி சைட்டில் உள்ள சைட் மியூசியம், சி சைட்டியில் மியூசியம் அமைய உள்ள இடத்தில் வைக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை பார்வையிட்டார்.




அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது "பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்க்க வேண்டியது மிக அவசியமாகும். இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியம் இது. எனவே அரசு மாதிரி பள்ளியை தற்போது ஆதிச்சநல்லூர் அழைத்து வந்து காட்டியுள்ளோம். இதுபோல் மற்ற பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை காண வரவேண்டும். உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் துவங்கும் பணி சிறிது காலம் தாமதப்பட்டது.




தற்போது இந்த பணியை துவக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் அந்த பணி துவங்கும் . திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் மாநில தொல்லியல் துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து எடுத்த பொருள்களை காட்சி படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் பொருநை அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றார்.