திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, கோவை , தஞ்சாவூர், கன்னியாகுமரி, போன்ற வெளி மாவட்டங்களுக்கும் தண்டராம்பட்டு, செங்கம், சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதேபோன்று புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கிரிவலப் பாதையில் உள்ள பல்வேறு ஆசிரமங்களை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறனர். ஆன்மிகச் சுற்றுப்பயணம் மட்டுமின்றி தொழில் ரீதியாகவும் பலர் வந்து செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் அதிகாலை சுமார் 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.




இரண்டு தண்ணீர் டேங்குகளும் தண்ணீரின்றி காட்சி பொருளாக உள்ளது


இந்த பேருந்து நிலையத்தில் வேலூர் பேருந்து நிற்கும் இடத்தின் எதிரில் தனியார் அமைப்பின் மூலம் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குடிநீர் நிலையம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தததால் பயன்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள இரண்டு குடிநீர் தொட்டிகளும் பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு பெரும்பாலும் வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்களும் ஏழை எளிய மக்களும் தான் அதிக அளவில் வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடைகளில் பாட்டில் குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. கையில் போதிய பணம் இல்லாமல் வரும் நபர்கள் தண்ணீர் கூட வாங்கி குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மத்திய பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இதுகுறித்து பயணிகளிடம் பேசுகையில்


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பல்வேறு மாநிலம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் நெடுதூர பயணத்தை மேற்கொண்டு தான் திருவண்ணாமலை வந்து அடைகின்றனர். அப்பொழுது பேருந்து நிலையத்தில் தண்ணீர் வேண்டுமென்றால் கடைகளில் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலைமை உள்ளது. ஆனால் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்குகளில் சுத்தமான தண்ணீர் இல்லாமலும் உள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தினர் இதனை கவனத்தில் கொண்டு பேருந்து நிலையத்தில் புதியதாக தண்ணீர் டேங்க் அமைக்க வேண்டும் மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம் ஏனென்றால் பல்வேறு மாநிலத்தில் இருந்து வரக்கூடிய நபர்கள் அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியவில்லை எனக் கூறி பேசி செல்கின்றனர் என தெரிவித்தார்.