திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பழிக்குப்பழியாக தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டு சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

Continues below advertisement

கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூலச்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன் மகன் காளிமுத்து (40). விவசாயி. இவரது தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் தரப்பினருக்கும் இடையே, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது. இருதரப்பையும் சேர்ந்த பெண்களுக்கு இடையே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினைதான் இதற்கு மூலகாரணமாக இருந்துள்ளது.

Continues below advertisement

இதில் சித்திரபுத்திரனின் ஆதரவாளர்களால் பெருமாள் பாண்டியன், பெருமாள் பாண்டியனின் ஆதரவாளர்களால் திண்டுக்கல்லில் வைத்து சித்திரபுத்திரனின் மருமகன் குமார் என, அடுத்தடுத்து 6 கொலைகள் பழிக்குப் பழியாக நடந்துள்ளன. இந்நிலையில், காளிமுத்து தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீரவநல்லூர் சென்றார்.

மீண்டும் மருதுடையார்குளம் பகுதியில் இருந்து மூலச்சிக்கு சென்றபோது, ஒரு காரிலும், 3 மோட்டார் சைக்கிள்களிலும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 9 பேர் கும்பல் இவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது காரை அதிவேகமாக மோதியதில் காளிமுத்துவும், அவரது இரு மகன்களும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளிமுத்துவும், சிறுவன் சின்னத்துரையும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர். அப்போது, இவர்களை விரட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், காளிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, அவரது தலையை துண்டித்து ஒரு சாக்குப்பையில் எடுத்துக்கொண்டு, 5 கி.மீ. தொலைவில் கல்லிடைக்குறிச்சி - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் கரம்பை கிராமம் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீரவநல்லூர் மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பலத்த காயமடைந்த சின்னத்துரையை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு, மாவட்ட எஸ்.பி.விஷ்வேஷ் பா.சாஸ்திரி மற்றும் போலீஸார் விசாரித்ததில் காரில் வந்த கும்பல் பெருமாள்பாண்டியன் தரப்பினர் என்பதும், முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதும் முதற்கட்டவிசாரணையில் தெரியவந்துள் ளது. தப்பியோடிய கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கொலை சம்பவத்தால் மூலச்சி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.