ரஷ்யாவை சேர்ந்த சிலர் 2 தினங்களுக்கு முன்பு கூடங்குளம் வந்த நிலையில் அவர்கள் அங்குள்ள அணுமின் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை விசாரணைக்காக கூடங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஒன்பது பேரிடம் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் ரஷ்யாவின் அணுசக்தி துறைக்கு சொந்தமான ரோசோட்டம் எனப்படும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகத்தைச் சார்ந்த சிஸ்லோவா இரினா (Shilova Irina) தலைமையில் அண்டன் மினியோவ் (ANTONMINEEV), அலெஸ்சாண்டர் சேவட்சோ (Alejsandr Shevtsov), டிமிட்ரி டர்பின் (Dmitrii Turphin), அலெக்ஸ் யூனோவ் (ALEXSEIV IONOV), அண்டன் படுனோவ் உட்பட 6 ரஷ்யர்களும் கூடங்குளம் வந்த நிலையில் இவர்களுக்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, தினேஷ் தளவாய் மற்றும் திருவனந்தபுரத்தைச் சார்ந்த கார் ஓட்டுநர் சஜிப் ஆகியோர் உதவி செய்துள்ளனர். 


9 பேரிடம் நடந்த விசாரணையில் அணு உலை குறித்து டாக்குமென்ட்ரி படம் எடுப்பதற்காக வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஷ்யாவை சேர்ந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது பற்றி ஆறு ரஷ்ய நாட்டை சார்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்ய கூட்டமைப்புக்கும், இந்திய குடியரசுக்கும் இடையே அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துதல் மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றில் நீண்டகால ஒத்துழைப்பு குறித்தும்  Rosatom இன் பிரிவுகளின் செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும், புதிய வணிக வாய்ப்புகளைத் தேடுவதற்கும், உலக சந்தையில் ரஷ்ய அணுசக்தித் துறையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும், திறமையான வணிகத்தை உருவாக்குவதற்கும்,  சந்தைப்படுத்தல், வீடியோக்களின் படப்பிடிப்பில் பங்கேற்க  ரோசட்டாம் அதிகாரி Shilova Irina தலைமையில்  இடிந்தகரை ஊருக்கு மேற்கே கூடங்குளம் அணு உலைக்கு 1 Km கிழக்கு பகுதியில் போட்டோ எடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் எடுத்த ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.