துறைமுக நகரமான தூத்துக்குடி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியாக உருவெடுத்து 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 37 ஆயிரத்து 830 பேர் வசிக்கின்றனர். இருப்பினும் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் இதுவரை அமையவில்லை. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடபாகம், மத்தியபாகம், தென்பாகம் மற்றும் முத்தையாபுரம், தாளமுத்து நகர், தெர்மல்நகர் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 


                             

 

மாநகரில் செயல்பட்டு வரும் காவல் நிலையங்கள் அனைத்துமே ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மாநகரில் போதுமான காவலர்கள் இல்லாத நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் பல்வேறு வழக்குகள் விரைந்து முடிக்கப்படாமல் முடங்குவதற்கு காவல் ஆணையர் இல்லாததே காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர். 

                                 

                                                                               

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, மாவட்டத்தில் புலனாய்வு செய்வதற்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் கண்காணிப்பதற்கும் போதிய அளவு உளவுத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை மாவட்டமாக இருப்பதால் கடற்கரை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல் போன்ற அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளன. இதனை கண்காணிக்க போதுமான அளவு உளவுப் பிரிவு போலீசார் பணியில் இல்லை என்பதும் பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால், புதிய காவல் ஆணையரை நியமனம் செய்ய முடியும்

                                         

 

அவ்வாறு அமையும் போது, போலீஸ் துறைக்கு புத்துயிர் கிடைக்கும். அதே போன்று தேவையான பணியிடங்கள் நிரப்பப்பட்டு குற்ற சம்பவங்களில் ஏற்படும் தேக்க நிலையை சரிசெய்ய முடியும். மாநகராட்சியாக பெயரளவுக்கு மட்டுமே தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி உண்மையில் மாநகராட்சிக்கான அந்தஸ்தை ஒருங்கே பெறவில்லை. ஆகையால் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாநகர போலீஸ் ஆணையரகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் அமைந்து உள்ள போலீஸ் நிலையங்கள் தவிர சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களையும் இணைத்து புதிய ஆணையரகம் அமைப்பதற்கான பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் விரைவில் தூத்துக்குடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.