தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கடற்கரை பகுதி வேம்பார். இங்குள்ள பெரும்பாலான மக்கள் மீன்பிடித் தொழிலைத்தான் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பார் கடற்கரை பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலையின் காரணமாக  குடிசைகள் அடித்து செல்லப்பட்டது மட்டுமின்றி, பாதுகாப்பு காரணமாக அந்த  குடும்பத்தினர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் அமர்த்தபட்டனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்ட இடத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் இந்த மீனவ குடும்பங்கள் பரிதவித்து வருகின்றனர். பட்டா இல்லை என்பதால் வீடு கட்டவோ, மின் இணைப்பு பெறவோ முடியாமல் குடிசையில்  இருளில்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுனாமியின் காரணமாக பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்ட மீனவ மக்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யாத காரணத்தினால், சிறிய ஓலை குடிசையில், மணல் தரையில் சிமிழி விளக்கின் வெளிச்சத்தை கொண்டு பெரும் சிரமத்திற்கு இடையில், விஷ ஜந்துக்களின் ஆபத்தான சூழ்நிலையில்தான் தங்களது வாழ்க்கையை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் குடிசையின் உள்ளே வருவதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தார்பாய்களை வாங்கி கூரையின் மீது போட்டு மூடி வைத்துள்ளனர். இருப்பினும் மணல் தரை என்பதால் சேற்றிலும் சகதியிலும் தான் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அரசு சார்பில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட வேண்டிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை என இவற்றை மட்டும் வழங்கிய தமிழக அரசு தங்களுக்கு பட்டா வழங்காமல் 18 ஆண்டுகளுக்கும் மேலாக காலம் தாழ்த்தி வருவதால் மின் இணைப்பு  பெற முடியமால் அரசு வழங்கிய  இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவைகளை காட்சி பொருளாக வைத்துள்ளனர். மின் இணைப்பு இல்லை என்பதால் இரவு நேரங்களில்  தெருவிளக்கின் வெளிச்சத்தில் தான் இப்பகுதி மக்கள் உணவு சமைக்கும் நிலை. இங்குள்ள குழந்தைகள் மின் இணைப்பு இல்லாததால் சிறிய விளக்கின் வெளிச்சத்தை கொண்டும், மொபைல் டார்ச் லைட்டின் வெளிச்சத்தை கொண்டுமே பாடங்களைப் படித்து வருகின்றனர். சரிவர படிக்க முடியாத காரணத்தினால் இப்பகுதி குழந்தைகளில் பலர் ஆரம்பக் கல்வியிலேயே அவர்களின் படிப்பை நிறுத்திவிடுவதாக கூறுகின்றனர்.

மின்சார வசதி இல்லை என்ற காரணத்தால் தாங்கள் சமையலுக்கு மிக்சியில் தேங்காய் அரைப்பதற்கும், செல்போனில் சார்ஜ் போடுவதற்கும் அருகாமையில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு முறையும் ரூ.10 பணம் கொடுத்துதான் பயன்படுத்த வேண்டியுள்ளது கூறும் இவர்கள், அரசின் இலவசம்லாம் கரெக்டா கொடுக்காக, ஆனால் டிவி பார்க்கவும் வெயில் காலத்தில் பேன் போடவும் தான் கரெண்டு கொடுக்கலை என்கின்றனர்.இனியாவது அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  எதிர்பார்ப்பில்  அப்பகுதி மீனவ குடும்பங்கள் காத்திருக்கின்றனர்.