செய்துங்கநல்லூர் அருகே இன்று பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆட்டோவில் வந்த 7 குழந்தைகள் காயம் அடைந்தனர். 




தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம் தோறும் பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். அனவரதநல்லூர் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. செல்போன் ஆட்டோவின் உட்புறத்தில் விழுந்ததை எடுக்க குனிந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பலியான மாணவன் செல்வநவீன் கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு இன்று தான் முதல் நாளாக பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.


மேலும், இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகி 7 பேரும் காயமடைந்தனர். இதில் சில மாணவ, மாணவிகள் இன்று தான் பள்ளிக்கு முதல் நாள் சென்றனர். விபத்து குறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.





ஆட்டோ ஒட்டுனர்கள் மிக கவனமுடன் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும்போது, ஆட்டோகளை இயக்க வேண்டும், பெற்றோர்கள் பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றிவிட்டால் கடமை முடிந்ததாக இருக்ககூடாது, பெரும்பாலும் பள்ளி இறுதி நேரத்தில் பிள்ளைகளை அவசர அவசரமாக தயார் செய்வதும், உரிய நேரத்தில் சேர்க்க வேண்டும் என்ற அதிவேகமும் விபத்திற்கு காரணமாக உள்ளது,  அதிக எண்ணிக்கையில் பிள்ளைகளை ஏற்றி செல்வதற்கு காரணமாகும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தபிறகு அரசு விழித்து கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதும், சில காலத்திற்கு பின் அவை காற்றில் பறப்பதும் வாடிக்கையாகிவிட்டது  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.