நெல்லை தினமாம் இன்று.. ஏலே எங்கிட்டுல போற.. கடக்கி போனா இத வாங்கிட்டு வா....


நெல்லை என்றாலே ஞாபகம் வருவது இருட்டுக்கட அல்வா, நெல்லையப்பர் கோயில், கொஞ்சம் அங்கிட்டு போனா குத்தாலம், தென்மல, வடக்காம பார்த்தா சங்கரநாராயணர் கோயில், கிழக்க பார்த்தா உவரி, மணப்பாடு, தூத்துக்குடின்னு சொல்லிட்டே இருக்கலாம். எல்லாத்துக்கும் மேல வழக்கு மொழின்னு இங்கிட்டு உண்டு, அதன் தனித்துவமே தனி தான்.




                                                வேறெந்த வட்டார வழக்கிலும் இல்லாத நெல்லை தமிழ்


"வீட்டுக்குள்ள கிடக்கானா இவன், எப்பப்பாரு ரோடே கதின்னு கிடக்கான்" ஏல எங்கிட்டுல சுத்திட்டு இருக்க, அங்கிட்டு போய் அப்பள கட்டு வாங்கிட்டு திங்க வா என்பதில் துவங்கி நெல்லை தமிழின் தனித்துவமே தனிதான். 


                                                                   வாங்க மக்களே ஊருக்குள்ள ஒரு ரவுண்டு




நெல்லை தினத்தை முன்னிட்டு ஊருக்குள்ள ஒரு ரவுண்டு வந்தோம். டவுனு கன்னியாகுடி தெருக்குள்ள போனதும்  அங்கிட்டு உள்ள கோயில் வாசலில் கால நீட்டி உக்காந்துட்டு ஊர் சொலவட பேசிட்டே பீடி இலய சுத்திட்டு இருந்தாக... மயினி கேட்டியளா அவ மயினாயிருக்கு அண்ணன் கூட பிறந்த அக்கா மகளுக்கு வீராவுரத்துல கல்யாணம் நாளைக்கி போவனும் , அப்படியே தச்சநல்லூர்ல ஒரு கல்யாணம் போயிட்டு சாய்ங்காலம் தான் வரனும்ன்னு பீடிய சுருட்டிட்டே பேசிட்டு இருந்தாக.


                                                        இவ்வளவு தூரம் வந்தாச்சி, பக்கம் தான் நம்ம தூத்துக்குடி




அப்படியே அத கேட்டுகிட்டே கிழக்காம வந்தோம். தூத்துக்குடி மாவட்டம் வரவேற்கிறதுன்னு போர்டு இருந்திச்சி, அப்படியே வல்லநாடு, தெய்வசெயல்புரம் வழியா தூத்துக்குடி வந்தோம்.ஏலே எங்கிட்டு போறன்னு முதலாதா குரல் வந்திச்சி..... அப்படியே கிழக்க வந்துட்டே இருந்தோம்.. தூத்துக்குடி அத்தத்துக்கு வந்ததும் கருவாடு வாசம் சுண்டி இழுத்திச்சி... அப்படியே திரேஸ்புரம் கடற்கரைக்கு போனா அங்க சால மீன், சீலா மீனுன்னு ஏலம் போயிட்டு இருந்திச்சி... அப்படியே அதன் வாசத்த மூக்கில் ஏத்திட்டு கொஞ்சம் தெக்காம போய் கடல் காத்த வாங்கிட்டு போனோம்... கடற்கரையோர காத்துக்கு ஏற்ப தெர்மல் புகையும் அங்கிட்டும் இங்கிட்டுமா ஆடிட்டு இருந்திச்சி... சரின்னு கொஞ்சம் ரசிச்சிட்டு கொஞ்சம் வடக்க திரும்பி வி.இ.ரோட்டில் போனா அங்கிட்டு ஒரே கூட்டம்.. என்னல இது கூட்டம்னு பார்த்தா மக்ரூனும் கேக்கும் வாங்க கூட்டமா நின்னுட்டு இருந்தாக.... அப்படியே தெக்க திரும்பி திருச்செந்தூர நோக்கி போனா... தெக்காத்தூரின் வெத்தல வாசம் கமகமன்னு இருந்திச்சி... அப்படியே அதயும் கடந்து போனோம். சளசளன்னு காத்து சத்தம் ஆமா பன மர காத்துடன் பயினியும் கருப்பட்டி வாசமும் சேர்ந்து வந்திச்சி..


                                                            அட நம்ம முருகனை பார்க்காம போன எப்படி?




அப்படியே கொஞ்சம் தெக்க தள்ளி வந்தால் கோபுர தரிசனம் கோடி புண்ணியமுன்னு திருச்செந்தூர் முருகன் கோவில் கோபுர தரிசனத்துடன் சுக்கு போட்டு பதமா இருந்த புட்டு கருப்பட்டி வாசமும் கூடவே வந்திச்சி.. அப்படியே கொஞ்சம் நிழலுக்கு ஒதுங்கி நின்னோம். சரி இந்தாக்ல போவோம்னு சொல்லிட்டு ஆலந்தல, குலச வழியா மணப்பாட்ட நோக்கி போனோம்.. இடைல ஒன்ன மறந்திட்டோம் பார்த்திகளா... குலசக்கு போய் முத்தாரம்மன கும்பிட்டுட்டு தசராக்கு சூரசம்காரம் நடைபெறும் கடக்கர ஏரியாவுக்கு போய் பார்த்தால் இங்கிட்டு வான்னு கூப்பிட்டிச்சி மணப்பாடு... பன ஓல காத்து சள சளங்க போகும் ரோட்ல ஏத்தம் இறக்கம் ஏத்தம் இறக்கம்னு மணப்பாடு போயாச்சி... சுத்தி சுத்தி அழகழகா சர்ச், அப்படியே ஏறி போனா சர்ச்சும், பிரான்சிஸ் சேவியர் தவமிருந்த இடமும் கலங்கர விளக்கமும் இருந்திச்சி. மேலா இருந்து பார்த்தா அடடா இங்கிட்டு கடல் அலை நடுல மணமேட்டுல சர்ச் அங்கிட்டு மீன பிடிச்சிட்டு வர்ர படகுன்னு இருந்திச்சி. எல்லாத்தயும் ஒரே இடத்தில் பார்த்திட்டு கொஞ்சம் தள்ளி போனா பாலைவனம் அதாங்க தேரிகாடு வந்திச்சி.. செவ செவன்னு மண்ணுக்கு இடல அங்கங்க பச்ச பச்சயாய் பனையும் முந்திரி செடியும் வரவேத்திச்சி.. அங்கிட்டு கூடி போன போது ஒரு பெருசு சொல்லிச்சி ஏலே பார்த்து போ தொலஞ்சி கிலஞ்சி போயிடாதுன்னு சொன்னாக. சரின்னு கொஞ்சம் தேரி காட்ட ரசிச்சிட்டு போனா உவரி சுயம்பு லிங்கம் கோயிலில் இறங்கி சாமிய கும்பிட்டுட்டு கொஞ்சம் தெக்காம போனா கப்பல் மாதா கோயிலும் வந்திட்டு.. சரி கொஞ்சம் உக்காந்துட்டு சாமிய கும்பிட்டோம்..


                                  அண்ணாச்சி கடைல சூடா ஒரு டீ அடிச்சிட்டு அங்கிட்டுமாக்க போலாமா


கொஞ்சம் மழ மேகம் ஒருபடியா இருண்ட்டுட்டு வர அங்கிட்டு இருந்து கிளம்பி கூடங்குளம் வழியா வள்ளியூருக்கு போனோம். கூடங்குளம் கடல நிப்பாட்டி டீய குடிச்சிட்டு இருந்தால் ஹிந்தில பேசிட்டே  சாயான்னு நாலு பேர் வந்தாக. சரி வாங்கிய டீய குடிச்சிட்டு அண்ணாச்சிட்ட டீக்கு பத்து ரூபாய் கொடுத்துட்டு அங்கிருந்து நேரா வந்தா கோப முனிவர் விசுவாமித்திரர் தவமிருந்த இடம் வந்திச்சி. அங்க இறங்கி சாமிய மறுபடியும் கும்பிட்டுட்டு வள்ளியூர் வந்தோம். தெக்கால கன்னியாகுமரிக்கும் வடக்கால மதுரக்கும் பஸ்ஸு சர்புர்ருன்னு போயிட்டு இருந்திச்சி. சரி கொஞ்சம் தெக்க போவோனு காவக்கிணறு தாண்டி போனா தலக்கி மேல சுத்துற பேனு ரோட்டுல பெருசு பெருசா சுத்த காத்தும் கொஞ்சம் பலமா இருந்திச்சி. சரி இதுக்கு மேல போனா சரிப்பட்டு வராதுன்னு  வடக்கால திருந்வேலி நோக்கி கிளம்பினோம்.  




அப்படியே நான்குனேரி வழியா கூந்தன்குளம் பறவைகள பார்க்க போனோம். வெள்ள வெள்ளயா பறவைகள் சத்தம் போட்டுட்டே இருந்திச்சி... அப்படியே கொஞ்ச நேரம் அத நின்னு கேட்டுட்டு வந்தால் மேற்க திரும்ப ஆச வந்திச்சி.. ஆனா குறுக்கு வலிதான் வேண்டாம்ல அங்கிட்டு போனா இன்னும் டைம் ஆகுமின்னு சொல்ல களக்காட்ட கட் பண்ணிட்டு நெல்ல பைபாஸ் ரோட்டில் போனோம். ஒரு காலத்துல வயக்காடா இருந்த பூமி இப்போ எங்கிட்டு பாத்தாலும் வாங்க வாங்கன்னு போர்டு மயமா இருந்திச்சி.. அப்படியே யோசிச்சிட்டே ஜங்சன் வந்து ரயில்வேடேசன் வழியா மேம்பாலத்துக்கு போய் கண்ணம்மன் கோயில் தெரு வழியா போய் ஆத்துல ஒரு முக்காச்சிய போட்டுட்டு அங்க அடிக்கும் காத்துல கொஞ்சம் கண் அசந்துட்டு அப்படியே பாலம் வழியே வந்து ரயில்வேடேசன் வழியா  பாலத்திக்கு கீழ இருக்கும் சந்திரலாஸ்ல அல்வாவும் பொடி மிச்சரும் வாங்கிட்டு கிழக்காம வீட்டுக்கு கிளம்பினோம்.