நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கருத்தபிள்ளையூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியை ஜோஸ்பின் ராணி (45). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தெற்கு கள்ளிகுளத்தில் திருவிழாவிற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இரவு வீட்டு வாசல் முன்பு தனது உறவினருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் பக்கத்தில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து ஆசிரியை ஜோஸ்பின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதன் மதிப்பு சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் ஆகும். இந்த செயின் பறிப்பு  சம்பவம் அருகில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது, அதில் அந்த நபர் நீண்ட நேரமாக அப்பகுதியில் சுற்றி திரிந்தும் செல்போனில் பேசிய படி நோட்டமிட்டுக்கொண்டு பின் செயினை பறித்து சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து ஆசிரியை ஜோஸ்பின் ராணி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த  காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். 


இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக வழிப்பறி செய்த திருடனை கண்டுபிடிக்கப்பட முடியாத சூழ்நிலையில் கடந்த வாரம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வள்ளியூர் காவல்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் தங்கச் சங்கலியை திருடியவர் யார் என தெரியவில்லை எனவும், திருடு போன நகையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், எழுத்துப்பூர்வமாக  மனுதாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வழக்கை விசாரித்து காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்ததோடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் மீண்டும் ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து திருடிய நபரை கண்டுபிடித்து கைது செய்யவும், களவு போன தங்க சங்கிலியை விரைவாக கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் எனவும் வள்ளியூர் காவல் துறைக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சிசிடிவி காட்சியில் திருடனின் முகம் முழுமையாக பதிவாகியிருந்தும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பின் வாங்கியதை நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாமல் மீண்டும் கண்டுபிடித்து தர உத்தரவு தெரிவித்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.