நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு, திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகள்.  மலைகளில் இருந்து கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உணவிற்காக அவ்வப்போது இங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் இப்பகுதியினர் மிகுந்த அச்சத்தோடு வசித்து வருவதோடு வனவிலங்குகள் கீழே வராதவாறு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர், இந்த சூழலில் கடந்த 22 - ந் தேதி  மணிமுத்தாறில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் 2  குட்டிகளுடன் தாய் கரடி புதரில் பதுங்கியிருந்தன. இதனை பார்த்த அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர், அதன்பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று  வெடி வைத்து கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.  இதனால் பயத்துடன் இருந்த அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்,




ஆனால் 3 கரடிகளும் வனத்திற்குள் செல்லாமல் மீண்டும் நேற்று இரவு ஊருக்குள் வந்துள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு காவலர் குடியிருப்பில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள்  கரடிகள் புகுந்த நிலையில் இரவில் அங்கு உலா வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் தங்களது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர், இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர்  கரடியை தற்காலிகமாக காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.






 




மணிமுத்தாறு பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அப்பகுதியை சுற்றி பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் வனத்துறையினர் கரடியை வெடி வைத்து காட்டுக்குள் அனுப்பும் முயற்சியை விடுத்து கூண்டு வைத்து பிடித்து வனத்திற்குள் கொண்டு விட வேண்டும் என்றும், மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் புகாதவாறு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர