திருச்செந்தூர் மாசி திருவிழா: கொடியேற்றம் இன்று! தேரோட்டம், தெப்பம் உற்சவம் குறித்த முக்கிய அறிவிப்புகள்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசி மாதம் வரும் பௌர்ணமி நாளன்று பெரும்பாலான ஆலயங்களை மாசிமகம் கொண்டாடப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் மகாமகம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே கொடியேற்றம் நடக்கும். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாதத்தில் மாசி திருவிழா 10 நாட்களுக்கு உற்சவமாக நடைபெறும். இதையொட்டி, பிப்ரவரி 21ம் தேதி சனிக்கிழமை இன்று மாசித்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வருபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.09 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து கொடி மரத்துக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. 5-ம் திருவிழாவான 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. 7-ம் திருவிழாவான 27-ந் தேதி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற (மார்ச்) 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந் தேதி(செவ்வாய்க் கிழமை) இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.






















