தூத்துக்குடி: 58,092 வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் அடையாள அட்டை வீட்டுக்கு வருமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 13 லட்சத்து 76 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18 முதல் 19 வயது வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டை திருத்தம் கோரியவர்களுக்கு, மொத்தம் 58,092 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவு தபால் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 13 லட்சத்து 76 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த இறுதிப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, கடந்த 2025 டிசம்பர் 19 முதல் 2026 ஜனவரி 30 வரை பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தப் பணியின் மூலம், புதிய இளம் வாக்காளர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்கள் உள்ளிட்ட 58,092 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இறந்தவர்கள் மற்றும் மாவட்டத்தை விட்டு வெளியேறியவர்கள் உள்ளிட்ட 9,626 பேர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இறுதிப் பட்டியலில், 6,71,742 ஆண் வாக்காளர்கள், 7,04,689 பெண் வாக்காளர்கள் மற்றும் 193 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், துணை வாக்குச்சாவடிகள் அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18 முதல் 19 வயது வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டை திருத்தம் கோரியவர்களுக்கு, மொத்தம் 58,092 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவு தபால் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதன் மூலம், வாக்காளர்கள் எளிதில் தங்களது அடையாள அட்டையைப் பெற முடியும். மேலும், 18 வயது பூர்த்தி செய்தும் இன்னும் பெயர் சேர்க்காதவர்கள், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தாலுகா அலுவலகங்கள் அல்லது இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் மற்றும் Voters Helpline செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, அனைத்து தகுதியான வாக்காளர்களும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.























