முத்துப்பேட்டை பகுதியில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதாஎன இன்று காலை முதல் சி விஜில் 2022 ஆப்ரேஷன் என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாளை இரவு வரை நடைபெறுகிறது.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் இன்று காலை முதல் சி விஜில் 2022' என்றபேரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு, கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன்  போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து கடந்த ஆண்டுகளில் ஆப்ரேஷன் அம்லா, 'சாகர் கவாச்' (கடல்கவசம்)  என்ற பெயரில், ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மாநில கடலோரப்பகுதிகளில் ஒத்திகை பயிற்சி இரண்டு நாட்கள் வருடம் நடத்தப்படுவது வழக்கம். 




அதன்படி, இந்த ஆண்டு  சி விஜில் 2022 ஆப்ரேஷன் என்ற பேரில் தமிழகத்தில் கடலோர பகுதியில் இன்று காலை முதல் துவங்கி நாளை இரவு வரை நடைபெறுகிறது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில்  சி விஜில் 2022 ஆப்ரேஷன் ஒத்திகை இன்று காலை துவங்கியது. அதன்படி முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார்  சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவாரூர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, முத்துப்பேட்டை டிஎஸ்பி  விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு  பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். 




அதேபோல் முன்னதாக முத்துப்பேட்டை கடலை  ஒட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்  ரகுபதி தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு  சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, அதேபோல் காட்டில்  உள்ள சுற்றுலா பயணிகள் தாங்கும் பகுதியில் தீவிரவாதிகள் சமூக விரோதிகள்  யாரும் இருக்கிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


இந்தநிலையில்  இந்த ' சி விஜில் 2022 ஆப்ரேஷன்' ஒத்திகையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட  போலீசார், அதுமட்டுமின்றி கடலோர காவல்படை போலீசார் மற்றும்  சிறப்பு போலீசார், மற்றும் ஊர்க்காவல் படை போலீசார் இந்த ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகை குறித்து மக்களுக்கு தெரியாததால் என்னா நடக்கிறது? தீவிரவாதிகள் சமூக விரோதிகள்  யாரும் இருக்கிறார்களா என்று தெரியாமல் இன்று காலை முதல் மக்கள் மத்தியில்  குழப்பம் ஏற்பட்டு ஒத்திகை குறித்து மக்களுக்கு தெரியாததால்  முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.