பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு இல்லாததால் குடும்பத்துடன் பைக்கில் வந்த அரசு ஊழியர் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒப்பந்தக்கார நிறுவனம் இயக்குனர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் வயது 50. இவர் நன்னிலம் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி வயது 38. மகள் ஓவிய லட்சுமி வயது 17. இவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி. இந்த நிலையில் குமார் பனங்குடியில் இருந்து திருவாரூருக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மற்றும் மகளுடன் சென்று விட்டு திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது விசலூர் என்கிற இடத்தில்  நெடுஞ்சாலையில் பாலப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்துள்ளார். இதில் பால கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பியில்  குமார் விழுந்ததில் அவரது வயிறு மற்றும் தொடை பகுதியில் இரும்பு கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



 

இந்த விபத்தில் குமாரின் மகள் மற்றும் மனைவி தேன்மொழிக்கு முகம் கை கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த பத்து நாட்களாக பாலக்கட்டுமான பணிகள் நடைபெறுவதாகவும் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் எவ்வித அறிவிப்பு பலகையோ தடுப்புகளோ வைத்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை என்றும் அதேபோன்று இந்த இடத்தில் மின் விளக்கு இன்றி இருள் சூழ்ந்து காணப்பட்டது தான் இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டி பேருந்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 

இந்த நிலையில் பாலம் கட்டுமான நிறுவனம் இயக்குனர் விஜயகுமார் மேல்பார்வையாளர் ரவிச்சந்திரன் மேலாளர் ரவிக்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் இறப்புக்கு காரணமானவர்கள் என நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சூப்பர்வைசர் மற்றும் மேலாளர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் விபத்து நடந்த இடத்தில் தற்பொழுது பேரிகாடுகள் அமைக்கப்பட்டு டேக் டைவர்ஷன் போர்டு வைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து நடப்பதற்கு முன்பாகவே இதே போன்று ஒப்பந்தக்கார நிறுவனமும் காவல்துறையினரும் முறையாக அந்த பகுதியில் டேக் டைவர்ஷன் போர்டு வைத்திருந்தால் இந்த விபத்து  நடக்காமல் இருந்திருப்பதாகவும் தற்பொழுது ஒரு உயிர் போனதற்கு பிறகு இதே போன்ற சம்பவங்கள் சரி செய்வது வேதனை அளிப்பதாகவும் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.