1984ல் அ.தி.மு.க., முன்னாள் உணவுத்துறை அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்
1980ம் ஆண்டு,ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,சார்பில், போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகினார். மீண்டும், 1984ம் ஆண்டு, அ.தி.மு.க.,சார்பில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார்.

தஞ்சாவூர்: எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, உணவுத்துறை அமைச்சராக இருந்த வீராசாமி இன்று காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி,88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, கடந்த 1971ம் ஆண்டு வெள்ளூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தொடர்ந்து, 1972ம் தி.மு.கவில், இருந்து, எம்.ஜிஆர் அ.தி.மு.க.,வை துவங்கியது போது, எம்.ஜி.ஆர்.,மீதான ஈர்ப்பால், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, அ.தி.மு.க., ஒன்றிய அமைப்பாளராக பதவி வகித்தார்.
பிறகு, 1980ம் ஆண்டு,ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,சார்பில், போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகினார். மீண்டும், 1984ம் ஆண்டு, அ.தி.மு.க.,சார்பில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார். இதையடுத்து வீராசாமியை உணவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக எம்.ஜி.ஆர்., அறிவித்தார். அதன் பிறகு, அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்த வீராசாமி நேற்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அ.தி.மு.க.,வினர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம் நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது. வீராசாமிக்கு வாணிதாமணி, ஜெயந்தி எனற மனைவியும் உள்ளனர். இதில் வாணிதாமணி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
மதியழகன், செந்தில்குமார் என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். இது குறித்து வீராசாமி உறவினர்கள் கூறியதாவது: வீராசாமி எம்.ஜி.ஆர்.,மீது தீவிர விசுவாசியாக இருந்து வந்தார். முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி நமது கழகம் என்ற அமைப்பை துவங்கிய போது, எம்.ஜி.ஆருக்கு, வீராசாமி ஆறுதலாக இருந்தார். நெல் குவிண்டாலுக்கு 50 ரூபாயை விவசாயிகளுக்கு வீராசாமி உணவுத்துறை அமைச்சராக இருந்த போது, எம்.ஜி.ஆர்.,ஒப்புதலுடன் அறிவித்து, வழங்கினார். மேலும், ஒரத்தநாட்டில் நிலஅளவை கல்லுாரி, புறவழிச்சாலையை கொண்டு வந்தார்.
வீராசாமியின் மூன்று பிள்ளைகளுக்கு, எம்.ஜி.ஆர்., திருமணம் செய்து வைத்தார். இதனால், தனது மகன்களையும் அ.தி.மு.க.,வை தவிர வேறு கட்சிக்கு செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்று தெரிவித்தனர்.























