சிவகங்கை பூங்கா பகுதியில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பகுதியில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்வித்துறை அலுவலகம் அறநிலையத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை சிவகங்கை பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலக சுற்றுச்சுவரில் செடி கொடிகள் அதிக அளவில் மண்டி உள்ளது. இதனால் கட்டிடங்கள் சேதம் அடையும் நிலை உள்ளது. இதை உடன் சீரமைக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாரம்பரியமும், தொன்மையும் மிக்கத் தமிழ்க் கலாசாரத்தின் மீது வெளிநாட்டுப் பயணிகள் தனிக் கவனத்தைச் செலுத்தி, சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். இவர்கள் ரசிக்கும் சுற்றுலாத் தலங்களில் ஆகச் சிறந்தது தஞ்சாவூர் பெரிய கோயிலாகும்.
தஞ்சை பெரிய கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் என பலவாறாக அழைக்கப்படும் இந்தக் கோயில் உலகமே வியக்கும் அளவுக்கு கம்பீரமாய் நிற்கிறது. சோழ நாட்டில் மாபெரும் பெருமைகளை தன்னுள் அடக்கி கம்பீரமாக நிற்கிறது.
தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இது, 10ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் கட்டிய இதை பல்லாயிரக்கணக்கானோர் வந்து, ஆண்டுதோறும் பார்த்து பிரமித்து போகும் அளவுக்கு இதன் சிறப்புகளும் உயர்ந்து நிற்கிறது. இது நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில்களில் ஒன்று.
அடுத்த பெருமை அரண்மனை. ஆனால் இ து சோழர்கால அரண்மனை அல்ல. நாயகர்களால் கட்டப்பட்டது, தஞ்சை நகரில் உள்ள இந்த அரண்மனை. கி.பி. 1674-இல் இருந்து 1855ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இந்த அரண்மனை இருந்தது, தற்போது இது சுற்றுலாத் தலமாகியுள்ளது.
நகரின் மையப் பகுதியில் உள்ளதால் ஆண்டுதோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதேபோல் தஞ்சையில் மக்கள் பூங்காவாக உருவாக்கப்பட்டது சிவகங்கை பூங்கா. இது பிரகதீஸ்வரர் கோயிலின் கிழக்கே அமைந்துள்ளது. சிவகங்கை குளத்தை உள்ளடக்கியது.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பகுதியில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்வித்துறை அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம், அறநிலையத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள சுற்றுச்சுவர் முழுவதும் செடி கொடிகள் மண்டி சேதமடைந்து உள்ளது.
அது பழமையான கட்டிடம் என்பதால் இங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் சிவகங்கை பூங்காவுக்கு குழந்தைகள் உட்பட முதியோர்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு இங்கு மண்டியுள்ள செடி, கொடிகளை அகற்றி சுற்றுச்சுவரை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.























