திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகை, காரைக்கால் (புதுச்சேரி) உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விலை நிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலத்தில் அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து அதன் மூலமாக எண்ணெய் எரிவாயு எடுத்து வந்ததாக தெரிவித்திருந்தது. இந்த கிணற்றில் அதிக அழுத்தத்துடன் கூடிய வாய்வு தொடர்ந்து வெளியேறி வந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டு பணிகளை நிறுத்திக் கொண்டு ongc நிறுவனம் வெளியேறியது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் மீண்டும் பராமரிப்பு பணி என்கிற பெயரில் ஓஎன்ஜிசி நிறுவனம் கனரக வாகனங்களுடன் பெரியகுடி எண்ணெய் எடுக்கும் பணிகளை தொடங்கியது.
இந்த எரிவாயு கிணற்றில் உள்ள அதிகப்படியான எரிவாயு அழுத்தத்தை முழுமையாக வெளியேற்றி கிணற்றினை பாதுகாப்பான நிலையில் வைப்பதற்கு 39 நாட்கள் ஆகும் என ஓஎன்ஜிசி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. மேலும் 39 நாட்களுக்குப் பிறகு கிணற்றினை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஓஎன்ஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் எட்டு பேர் கொண்ட கண்காணிப்புக்குள் ஒன்று செயல்பட்டு வருகிறது கிணற்றில் வேலை நடைபெறும் பொழுது அவற்றைக் குழு கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தரப்பில் இருந்து இரண்டு நபர்கள் கண்காணிப்பு குழுவுடன் ஓஎன்ஜிஜி பணிகளை கண்காணிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.